ஜூலை,14,2018. உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள, தென் சூடான் புதிய நாட்டில் துன்புறும் மக்கள் மத்தியில், கத்தோலிக்க அமைப்புகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. 2011ம் ஆண்டில் புதிய நாடாக உருவெடுத்த தென் சூடானில், 2013ம் ஆண்டில் மீண்டும் தொடங்கிய சண்டையில் மக்கள் பெரிதும் துன்புற்று, கடும் ஏழ்மை நிலையில் உள்ளனர்.
வறுமையில் வாடும் இலட்சக்கணக்கான மக்களுக்கும், அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து மனிதாபிமான உதவிகளை மட்டுமே சார்ந்திருக்கும் மக்களுக்கும், இத்தாலிய ஆயர் பேரவையின் உதவியுடன் இத்தாலிய காரித்தாஸ் உதவி வருகின்றது.
ஐ.நா.வின் புலம்பெயர்ந்தவர் அமைப்பின் கணிப்புப்படி, தென் சூடானில், ஏறத்தாழ 21 இலட்சம் பேர் நாட்டுக்குள்ளேயும், 25 இலட்சம் பேர் அண்டை நாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ளனர். குறிப்பாக, உகாண்டாவில் பத்து இலட்சத்திற்கு மேலும், சூடானில் 7 இலட்சத்து 70 ஆயிரமும், எத்தியோப்பியாவில் 4 இலட்சத்து 40 ஆயிரமும், கென்யாவில் ஒரு இலட்சத்து 10 ஆயிரமும், காங்கோவில் 90 ஆயிரமும் என, இவர்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.
இதற்கிடையே, ஐ.நா. பாதுகாப்பு அவை, தென் சூடானுக்கு எதிரான ஆயுதத் தடைக்கு, இவ்வெள்ளியன்று இசைவு தெரிவித்துள்ளது. இத்தடை, 2019ம் ஆண்டு மே மாதம் வரை நீடிக்கும் என செய்திகள் கூறுகின்றன.
ஆதாரம் : UN/வத்திக்கான் செய்திகள்
All the contents on this site are copyrighted ©. |