2018-07-09 16:41:00

பாரி கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு, ஒரு திருப்பு முனை


ஜூலை,09,2018. கிறிஸ்தவ ஒன்றிப்பு வரலாற்றில், இத்தாலியின் பாரி நகரில் நடைபெற்ற அண்மை சந்திப்பும், செப வழிபாடும், ஒரு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று அறிவித்தார், சான் எஜிதியோ அமைப்பின் நிறுவனர், அந்திரேயா ரிக்கார்தி.

மத்திய கிழக்கில் அமைதி குறித்து, அப்பகுதியின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் திருத்தந்தையும் பாரியில் கடந்த சனிக்கிழமையன்று சந்தித்து செப வழிபாட்டில் கலந்துகொண்டது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட ரிக்கார்தி அவர்கள், கிறிஸ்தவ சபைகளுக்கிடையே நிகழும் இறையியல் கலந்துரையாடல்களையும் தாண்டி, மத்திய கிழக்கின் அமைதி குறித்து இடம்பெற்ற இந்த ஒன்றிப்புக் கூட்டம், கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு புதிய பாதையை திறந்துள்ளது என்றார்.

போரும், மக்களின் கட்டாய குடிபெயர்தல்களும், வறுமையும், கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து உழைக்கவேண்டிய ஒரு கட்டாயத்தை எடுத்துரைக்கின்றன எனவும் கூறிய சான் எஜிதியோ அமைப்பின் நிறுவனர் ரிக்கார்தோ அவர்கள், பாரியில் இடம்பெற்றது, மத்திய கிழக்குப் பகுதிக்காக எழுப்பப்பட்ட செப வழிபாடு மட்டுமல்ல, அம்மக்கள் அமைதிக்காக எழுப்பிய அழுகுரலும்கூட என மேலும் உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்

 








All the contents on this site are copyrighted ©.