2018-07-05 16:04:00

திருத்தந்தை, உண்மையான உந்து சக்தியாக இருக்கிறார் - ஆல் கோர்


ஜூலை,05,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணியாற்றுவோர் பலருக்கு உண்மையான உந்து சக்தியாக இருக்கிறார்; குறிப்பாக, சுற்றுச்சூழல் குறித்த அவரது சிந்தனைகள் வழியே அவரது ஆன்மீகத் தலைமைத்துவம் தெளிவாகத் தெரிகிறது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் துணை அரசுத் தலைவர் ஆல் கோர் (Al Gore) அவர்கள் கூறினார்.

முன்னாள் துணை அரசுத் தலைவரும், உலக அமைதி நொபெல் விருது பெற்றவருமான ஆல் கோர் அவர்கள் வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த தனிப்பட்ட பேட்டியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு திருத்தந்தை ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.

காலநிலை மாற்றமும், மக்களின் வறுமையும் நெருங்கியத் தொடர்புடையவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கூறிய ஆல் கோர் அவர்கள், கடந்த சில ஆண்டுகளில் இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்த வறுமைப்பட்ட நாடுகளை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

இறைவனை மகிமைப்படுத்துவதே மனிதர்களாகப் படைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் என்பதைத் தான் நம்புவதாகவும், இறைவன் படைத்த இயற்கையைச் சீரழித்துவிட்டு, இறைவனை மகிமைப்படுத்த நினைப்பது முரண்பாடானது என்றும் ஆல் கோர் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

அரசுகள் எடுக்கும் முடிவுகளையும், ஆன்மீகத்தையும் இனி பிரித்துப் பார்க்க முடியாது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'இறைவா உமக்கே புகழ்' திருமடல் தெளிவாக, திட்டவட்டமாகக் கூறியுள்ளது என்று முன்னாள் துணை அரசுத்தலைவர் ஆல் கோர் அவர்கள் வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.