2018-06-27 15:33:00

29 புதிய பேராயர்களின் பாலியம் அர்ச்சிப்பு


ஜூன்,27,2018. "வயது முதிர்ந்தோருக்கும், நோயுற்றோருக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் உதவிகள் செய்ய நாம் அழைக்கப்பட்டுள்ளோம். கருவில் உருவானது முதல், இயற்கையாக இறக்கும் வரை வாழ்வு, பாதுகாக்கப்பட்டு, அன்புகூரப்பட வேண்டும்" என்ற சொற்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தன.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், இவ்வாண்டு ஜூன் மாதம் முடிய கத்தோலிக்கத் திருஅவையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம் பெற்ற 29 புதிய பேராயர்கள் அணியக்கூடிய பாலியம் என்ற கழுத்துப்பட்டைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூன் 29, இவ்வெள்ளியன்று அர்ச்சிக்கிறார்.

இந்தியாவின் பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்களும், இராஞ்சி உயர் மறைமாவட்ட பேராயர் பீலிக்ஸ் டோப்போ அவர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட 29 புதிய பேராயர்களில் இருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித பேதுருவின் வழித்தோன்றல்கள் என்பதை உறுதி செய்யும் பாலியம் கழுத்துப்பட்டை, செம்மறியின் உரோமத்தினால் உருவாக்கப்படுகின்றது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.