2018-06-26 14:47:00

விவிலியத்தேடல் : புதுமைகள் – கடல் மீது கடவுள்


யோவான் நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளில், ஐந்தாவது புதுமையில் நம் தேடலை இன்று மேற்கொள்கிறோம். இயேசு கடல் மீது நடந்த சென்ற இப்புதுமை, மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசு 5000 பேருக்கு உணவளித்த பிறகு, அன்று மாலை, அல்லது, இரவே, இந்தப் புதுமை நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புதுமையின் பின்னணியைச் சிந்திக்க, யோவான் நற்செய்தியின் துணையை நாடுவோம். இந்நற்செய்தியில் 5000 பேருக்கு உணவளித்த புதுமை நிகழ்ந்ததும், எழுதப்பட்டுள்ள வரிகள் இவை:

யோவான் நற்செய்தி 6:14-15

இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்த இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

வயிறார உண்டவர்கள் இயேசுவை வாயாரப் புகழ்ந்திருக்கவேண்டும். அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடீரென, "இவர்தாம் நாம் இத்தனை ஆண்டுகளாய் காத்து கிடந்த அரசர்" என்று உரக்கச் சொல்லியிருக்கலாம்.

பல நேரங்களில் மக்கள் கூட்டமாக இருக்கும்போது, அதுவும், கொஞ்சம் தீவிரமான உணர்வுகளுடன் கூட்டம் கூடும்போது, ஒரு சிறு பொறி போதும், பெருந்தீயை உருவாக்க. பல நூறு ஆண்டுகளாய், உரோமைய அரசின் அராஜகத்திற்குப் பலியாகி வந்த யூதர்கள் நடுவே, பல புரட்சிக் குழுக்கள் உருவாயின. ஒவ்வோர் ஆண்டும், எருசலேம் திருவிழாவுக்கென, யூதர்கள் கூட்டமாய் வந்தபோது, புரட்சிப் பொறிகள் ஆங்காங்கே தோன்றியதால், கலகங்கள் உருவாகி வந்தன. எனவே, யூதர்கள் கூட்டமாய் கூடுவதற்கு, உரோமை அரசு தடை விதித்திருந்தது.

இந்தச் சட்டத்தை ஒருவகையில் மீறிவந்தார் இயேசு. நல்லவேளை... அவரைத் தேடி வந்தவர்கள், அப்பாவி மக்கள். அதுவும் ஊருக்கு வெளியே கூடி வந்த கூட்டங்கள். எனவே, உரோமைய கவனத்தை இயேசு இன்னும் ஈர்க்கவில்லை. இயேசுவைச் சுற்றிக் கூடி வந்த கூட்டம், அவரது சொற்களால் கட்டுண்டு இருந்தனர். அவர் பேசியதைக் கேட்டபோது, அதுவும் அவர் இறை அரசு பற்றி கூறியபோது, ஏகப்பட்ட நம்பிக்கை அந்த மக்கள் மனதில் எழுந்தது. இயேசு போதித்த அரசு உடனே பிறந்துவிடும் என்று சிலர் நம்பவும் ஆரம்பித்தனர்.

மேலும், அதுவரை, இயேசுவின் சொல்லாற்றலைக் கண்டு வியந்த மக்கள், அன்று, அவரது செயல் திறமையையும் கண்டனர். 5000க்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்த அப்புதுமை, இயேசுவின் மீதிருந்த மதிப்பை இன்னும் பல மடங்காக உயர்த்தியது. மக்கள், அவரை, மானசீகமாக தங்கள் மனங்களில் அரியணை ஏற்றிவிட்டனர். மனதில் அரியணை கொண்ட அரசன், தங்கள் மண்ணிலும் அரசன் ஆனால் மிக நன்றாக இருக்குமே என்று எண்ணத் துவங்கினர். தன் மக்களை நன்கு புரிந்து வைத்திருந்தார் இயேசு. எனவே, அவர்களது எண்ணங்களை, அவ்வெண்ணங்களை செயல்படுத்த அவர்கள் கொண்ட வேகத்தைப் பார்த்தார். அவர்கள் மத்தியிலிருந்து நழுவிச் சென்றார்.

முன்பு ஒரு முறை, நாசரேத்தில், மக்கள் நடுவிலிருந்து நழுவிச்சென்றது இயேசுவுக்கு கட்டாயம் நினைவுக்கு வந்திருக்க வேண்டும் (லூக்கா 4: 28-30). அப்போது அவரைச் சுற்றி இருந்த கூட்டம் அவரை மலையுச்சிக்கு கொண்டு செல்ல முயன்றது, அவரை அரசராக்குவதற்கு அல்ல, அந்த உச்சியிலிருந்து அவரைத் தள்ளி கொல்வதற்கு. அவர் அன்று நாசரேத்து தொழுகைக் கூடத்தில் சொன்னது, அவர்களுக்குக் கசப்பாக இருந்தது. இன்று இந்த கூட்டமும் அவரை உச்சிக்குக் கொண்டு செல்ல விழைந்ததைக் கண்ட இயேசு மனதுக்குள் கட்டாயம் சிரித்திருப்பார்.

கூட்டத்தில் உருவாகும் நிதானமற்ற உணர்வுகள் ஒருவருக்குக் கோவில் கட்ட கற்களைத் திரட்டும். அல்லது அதே கற்களை எறிந்து அவரைக் கொன்று சமாதியும் கட்டும். அன்று நாசரேத்தூரில் தப்பித்துச் சென்றது போலவே, இன்றும் இயேசு கூட்டத்திலிருந்து கிளம்பி விட்டார். எதற்காக? தனித்திருக்க. செபிக்க.

தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்த இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். - யோவான் 6: 15. யோவான் பதிவு செய்துள்ள இக்கூற்றில் முக்கியமான ஒரு வார்த்தை - மீண்டும். அதாவது, இயேசு அடிக்கடி செய்யும் ஒரு செயல் - தனியே மலைக்குச் செல்லுதல் என்பதை, யோவான் இங்கு மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். தன் பணியின் நடுவில், சிறப்பாக, ஒவ்வொரு நாளும் தன் பணி முடிந்து மாலையில், இயேசு தனியே மலைக்குச் சென்றிருக்கிறார். தன் தந்தையுடன் உறவாட, உரையாட.

மின்னல் கீற்று போல சிந்தனை ஒன்று எனக்குள் பளிச்சிடுகிறது. கோஷம் போடும் மக்கள் கூறும் பொருளற்ற புகழுரைகளில் மயங்கி, கனவுகாணும் நமது தலைவர்கள், அவ்வப்போது இப்படி கூட்டத்திலிருந்து தப்பித்துப்போய், தனியே, தங்கள் வாழ்க்கையை, கொஞ்சம் அமைதியாய் சிந்தித்தால், எவ்வளவு பயன் கிடைக்கும்!

தந்தையோடு தனியே உறவாடச் சென்ற இயேசு, அங்கேயேத் தங்கி விடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடி வருகிறார். செபமும் வாழ்வும், செபமும் சேவையும் இயேசுவில் அழகாக இணைந்தன. இயேசு சீடர்களைத் தேடி வந்த போது, அவர்கள், நடுக்கடலில் போராடியதைக் கண்டார். கடல் மீது நடந்தார். இக்காட்சி, திருப்பாடல் 89ல் காணப்படும் வரிகளை நினைவுக்குக் கொணர்கின்றன:

கொந்தளிக்கும் கடல்மீது நீர் ஆட்சி செலுத்துகின்றீர்: பொங்கியெழும் அதன் அலைகளை அடக்குகின்றீர். - திருப்பாடல் 89: 9

உரோமையப் பேரரசைக் கவிழ்க்க உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள் என்ற வேண்டுதலோடு இயேசுவை அரசராக்க வந்த மக்களிடமிருந்து தப்பித்தார் இயேசு. காரணம்? அவரது அரசு, அவரது பணி, உரோமைய சக்திக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதை இயேசு விரும்பவில்லை. மாறாக, இவ்வுலக, மறு உலக சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படவேண்டும் என்பது அவரது விருப்பம். புனித பவுலின் கூற்று இயேசுவின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாய் உள்ளது.

எபேசியருக்கு எழுதிய திருமுகம் 6: 12

ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்.

இந்த சக்திகளைத் தன் காலடிக்குக் கொண்டு வருவதைக் காட்டும் வகையில் இயேசு கடல் மீது நடந்தார்.

தொடக்கநூலில் சொல்லப்பட்ட முதல் வரிகள் மீண்டும் இங்கு நிறைவேறுகின்றன.

தொடக்கநூல் 1: 1-2

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,  மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.

படைப்பின் துவக்கத்தில், இருள் சூழ்ந்திருந்தது. நீர்த்திரளின் மீது ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. இங்கும், இருள் சூழ்ந்திருந்தது. நீர்த்திரளின் மீது இயேசு நடந்தார்.

கடல் மீது நடந்து வருவது இயேசுதான் என்பதைச் சீடர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவர்களது எண்ணங்கள், பார்வைகள் எல்லாம், அவர்களைச் சூழ்ந்து பயமுறுத்திக்கொண்டிருந்த கடல் அலைகளிலும், பெரும் காற்றிலும் இருந்ததால், தங்களைத் தேடிவந்த இயேசுவை அவர்களால் பார்க்க முடியவில்லை. துன்பங்கள், போராட்டங்கள் இவை நிகழும்போது, கடவுளைப் பார்க்கமுடியாமல், கடவுள் நம்மை விட்டு தூரமாய் போய்விட்டதைப் போல் எத்தனை முறை உணர்ந்திருக்கிறோம்?

எப்போதோ வாசித்த ஓர் உவமைக் கவிதை இப்போது நினைவில் எழுகிறது. மனிதன் ஒருவன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்கு சான்றாக பாதை முழுவதும் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு சில நேரங்களில், அந்தப் பாதையில், ஒரு ஜோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம், அவன் அதிக துன்பத்தில், போராட்டத்தில் சிக்கியிருந்த நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டு போய் விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறான்.

"மகனே, பெரும் அலைகளாய் துன்பங்கள் வந்தபோது ஒரு ஜோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக் கொண்டு நடந்தேன்." என்றார் கடவுள்.

கடல் நடுவே, புயல் நடுவே தங்களைத் தேடி வரும் இறைவனை, இயேசுவைச் சீடர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்" என்றார். நற்செய்தியில் இயேசு அடிக்கடி பயன்படுத்தியுள்ள ஆறுதலான ஒரு சொல்: அஞ்சாதீர்கள், அல்லது கலங்காதீர்கள். இயேசுவைப் பற்றி முதல் நற்செய்தியை இடையர்களுக்கு அறிவித்த வானதூதர்கள் இதே சொல்லுடன் தங்கள் நற்செய்தியை ஆரம்பித்தனர்.

"அஞ்சாதீர்கள். இதோ மக்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்." - லூக்கா. 2: 10

"நான்தான். அஞ்சாதீர்கள்" என்று இயேசு கூறியதும், சீடர்களைச் சூழ்ந்திருந்த புயல் நீங்கியது அவர்கள் கரை சேர்ந்தனர் என்று யோவான் இந்தப் புதுமையை நிறைவு செய்கிறார். வாழ்க்கைப் படகை, பல புயல்களும் அலைகளும் சூழ்ந்தாலும், இயேசு நம்முடன் இருக்கிறார் என்பதை உணரும்போது, புயல்கள் அடங்கும், கரையும் வந்து சேரும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.