2018-06-02 14:36:00

சுற்றுச்சூழல் ஆபத்தால் ஆண்டுக்கு 12.6 மில்லியன் இறப்புகள்


ஜூன்,02,2018. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியே 26 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் மரணத்திற்குக் காரணமாகும், கடும் காலநிலை மாற்றம், மற்றும் காற்று மாசுகேட்டைத் தவிர்ப்பதற்கு, இரு ஐ.நா. நிறுவனங்கள், தங்கள் வல்லுனர்களுடன் இணைந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் WMO எனப்படும், உலக வானிலை ஆய்வு நிறுவனமும், WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனமும் இணைந்து, இம்முயற்சி குறித்து ஜெனீவாவில், இவ்வாரத்தில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.  

இந்த ஒப்பந்தம் குறித்து WMO நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பொதுவான நலவாழ்வு, கார்பன் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைத்தல் ஆகிய இரண்டுக்கும் உதவும் கொள்கைகளையும், நடைமுறைகளையும் இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

காற்று மாசுகேடு, நலவாழ்வுக்கு முக்கிய ஆபத்தாக உள்ளது எனக் கூறும் WHO நலவாழ்வு நிறுவனம், கடந்த செப்டம்பரில், புவர்த்தோ ரிக்கோவில் இடம்பெற்ற மரியா புயலில் 4,600க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 05, வருகிற செவ்வாய், உலக சுற்றுச்சூழல் தினமாகும்.

ஆதாரம் : UN /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.