2018-05-26 15:40:00

மூவொரு இறைவன் பெருவிழா - ஞாயிறு சிந்தனை


மூவொரு இறைவன் பெருவிழா - ஞாயிறு வாசகங்கள்

I              இணைச்சட்டம் 4: 32-34; 39-40

II            உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8: 14-17

மத்தேயு நற்செய்தி 28: 16-20

மழலையர்பள்ளி ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்தபடியே சுற்றி வந்துகொண்டிருந்தார். மிக, மிக ஆழ்ந்த கவனத்துடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, "என்ன வரைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல், "நான் கடவுளை வரைந்து கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னாள் அக்குழந்தை. உடனே ஆசிரியர், "கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே!" என்று கூறினார். அக்குழந்தை ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, "கொஞ்சம் பொறுங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்!" என்று புன்சிரிப்புடன் பதில் சொன்னாள்.

'இறைவனை யாரும் பார்த்ததில்லை' என்பது வளர்ந்துவிட்ட ஆசிரியரின் கணிப்பு. 'இறைவனை என்னால் எளிதில் காட்டமுடியும்' என்பது குழந்தையின் நம்பிக்கை. குழந்தையின் வடிவில் இறைவனைக் காணமுடியும் என்பதை ஏறத்தாழ எல்லா மதங்களும் கூறுகின்றன. உலகில் பிறக்கும் குழந்தைகள், இறைவனின் அற்புத வெளிப்பாடாக, இறைவன் என்ற பேரொளியின் சிறு பொறிகளாக, இவ்வுலகிற்கு வருகின்றனர். வயது வளர வளர, இந்த ஒளி மங்கி, மறைந்துவிடுகிறது.

மங்கி மறைந்துவரும் அந்த ஒளியை மீண்டும் ஏற்றிவைக்க இந்த ஞாயிறு நமக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. இன்று நாம் கொண்டாடும் மூவொரு இறைவன் பெருவிழாவை, குழந்தை மனதுடன் அணுகினால் மட்டுமே, இப்பெருவிழாவின் உண்மைப் பொருளை ஓரளவாகிலும் நம்மால் புரிந்துகொள்ளமுடியும். மூவொரு இறைவன் என்ற பெருங்கடலில், ஒரு குழந்தையின் குதூகலத்துடன் குளித்து மகிழ்வதற்குப் பதில், அக்கடலை தன் சிந்தனைக் குழிக்குள் சிறைப்படுத்த முயன்ற புனித அகுஸ்தின் பற்றிய கதை நமக்கு நினைவிருக்கலாம்.

இறையியல் மேதையான புனித அகுஸ்தின், ஒருநாள், ஆழ்ந்த சிந்தனையோடு கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். நம் இறைவன் மூன்று ஆட்களாய், அதேவேளையில், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து, விடை தேடிக்கொண்டிருந்தார். கடற்கரையில் ஒரு சிறுவன், சிறியதொரு சிப்பியில் கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். சிறுவன் இவ்வாறு நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின், சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்" என்றான். அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அச்சிறுவன் அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக்கொண்டு அளவுகடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனான்.

அன்று, புனித அகுஸ்தின், அக்குழந்தையிடம் கற்றுக்கொண்டது, மூவொரு கடவுளைப் பற்றிய உண்மை அல்ல. தன்னைப் பற்றிய உண்மை. அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம், புனித அகுஸ்தினை வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றியச் சிந்தனைகளை, பணிவுடன் கற்றுக்கொள்ள வைத்தது. ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் மறைக்கப்பட்ட உண்மைகள், குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்பட்டன என்று இயேசு சொன்ன வார்த்தைகளின் (மத். 11: 25; லூக். 10: 21) முழுப் பொருளையும் புனித அகுஸ்தின் தன் அனுபவப் பள்ளியில் பயின்றார்.

வாழ்க்கை என்ற பள்ளியில் நாம் பணிவுடன் காலடி எடுத்துவைத்தால், நம்மைப்பற்றி, உலகைப்பற்றி, கடவுளைப்பற்றி பல அழகான உண்மைகளைக் கற்றுக்கொள்ள முடியும். இந்தப் பணிவு குழந்தைகளுக்கு இயல்பாகவே உள்ளது. எனவேதான், அவர்கள் பல ஆழமான உண்மைகளை எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள்.

குழந்தைகளைப் போல மாறாவிடில் விண்ணரசில் நுழையமுடியாது என்று இயேசு சொன்னது விளையாட்டுக்காக அல்ல; குழந்தைகளைப் போன்ற மனம் கொண்டிருந்தால் மட்டுமே, இறைவனைப் பற்றியும், இறையரசைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும் என்பதை, இயேசு ஆணித்தரமாக நம்பினார். எனவேதான், அவர், இறைவனைப் பற்றியும், இறையரசைப் பற்றியும் நீண்ட இறையியல் விளக்கங்களைத் தருவதற்குப் பதில், குழந்தைகளும், குழந்தைமனம் கொண்டோரும் புரிந்துகொள்ளும் வகையில், எளிய கதைகள் வழியே விளக்கினார்.

நம் இறைவன், தனிமையில், தானாய் உறைந்திருக்கும் ஒருவராக அல்ல, மாறாக, மூவராக உறவுகொண்டிருப்பவர் என்ற பாடத்தை நமக்குச் சொல்லித் தந்தவர், இயேசு. அவர் இவ்விதம் இறைவனை அறிமுகம் செய்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை கோபத்தில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை, இஸ்ரயேல் மக்கள் நம்பி, தொழுதுவந்த கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டு உறவாய், குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு.

உறவே இறைவனின் உயிர்நாடி என்று இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் இஸ்ரயேல் மக்களும், மதத் தலைவர்களும் மறுத்தனர். அவர்கள் செய்தது தவறு என்று, நாம், வழக்கம்போல், தீர்ப்பிட துடித்துக் கொண்டிருந்தால், ஓர் ஆன்ம ஆய்வை மேற்கொள்வோம். இயேசு சொல்லித்தந்த மூவொரு இறைவனை நாம் எவ்விதம் புரிந்துகொள்கிறோம்? ஏற்றுக்கொள்கிறோம்? என்ற கேள்விகளை இன்று எழுப்புவது நல்லது.

வழிபாட்டு ஆண்டின் 'பொதுக் காலத்'தை நாம் ஆரம்பித்துள்ளோம். 'பொதுக்காலம்' என்று சொல்லும்போது, இதுவரை நாம் கடந்துவந்தது ஒரு சிறப்புக் காலம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறோம். ஆம், நாம் கடந்துவந்தது, ஒரு சிறப்புக் காலம்தான். கடந்த ஆறு வாரங்களாக, ஒன்றன்பின் ஒன்றாக நாம் பெருவிழாக்களைக் கொண்டாடிவந்தோம். இந்த விழாக்காலத்தின் சிகரமாக இன்று மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். திருஅவையில் நாம் கொண்டாடும் அனைத்து விழாக்களும், பிறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், விண்ணேற்பு என்ற வரிசையில், ஒரு நிகழ்வை மையப்படுத்தியவை, அல்லது, கிறிஸ்து, மரியா, யோசேப்பு, திருமுழுக்கு யோவான் என்ற வரிசையில், ஒரு நபரை மையப்படுத்தியவை. மூவொரு இறைவன் என்ற இந்த விழா மட்டுமே, அறிவு சார்ந்த ஒரு கருத்தை மையப்படுத்திய விழாவோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதற்குப் பின்னணியில் புதைந்திருக்கும் மற்றொரு முக்கியமான கேள்வி... மூவொரு இறைவன், உயிரோட்டமுள்ள உறவாக நம் மத்தியில் வாழ்கிறாரா? அல்லது, வெறும் அறிவுப் பசிக்கு உணவிடும் கருத்தாக வலம் வருகிறாரா?

திருஅவை வரலாற்றைப் புரட்டும்போது, மூவொரு இறைவன் என்ற பேருண்மை, பெரும்பாலும் ஏட்டளவு சிந்தனையாக, இறையியல் நூல்களின் பக்கங்களையும், பல்வேறு திருச்சங்க ஏடுகளையும் நிறைத்து விட்டனவோ என்ற நெருடல் நம் உள்ளங்களில் எழுகின்றது. மூவொரு இறைவனை, உயிரோட்டமுள்ள ஓர் உறவாக இயேசு நமக்குத் தந்தார். நாமோ அவரை ஒரு கருத்தாக மாற்றி, நூல்களிலும், கோவில்களிலும் பாதுகாத்து வருகிறோமோ என்று சிந்திக்கும்போது, ஆப்ரிக்காவில் சொல்லப்படும் கதையொன்று நினைவுக்கு வருகிறது.

ஒரு நாட்டின் பழங்குடியினரிடையே மறைபரப்புப் பணியாற்றிவந்த ஓர் அருள்பணியாளர், விடுமுறைக்கு, தன் தாயகம் திரும்பிச் சென்றார். அங்கு அவர் 'சூரிய மணிகாட்டி' (Sun dial) என்ற அற்புதப் படைப்பைக் கண்டார். அதன் பயனை, தன் மக்கள் புரிந்து, பயன்படுத்தவேண்டும் என்ற ஆவலுடன், அருள்பணியாளர், தன் விடுமுறை முடிந்து திரும்பும்போது, சூரிய மணிகாட்டி ஒன்றை வாங்கிச் சென்றார்.

அவர் கொண்டுவந்திருந்த சூரிய மணிகாட்டியைக் கண்ட பழங்குடியினர், ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தனர். சூரிய மணிகாட்டியின் பயனை, தன் மக்கள் புரிந்துகொண்டனர் என்ற மகிழ்வில், அருள்பணியாளர், அதை அவ்வூருக்கு நடுவே ஒரு பொதுவான இடத்தில் பொருத்தி வைத்தார்.

அடுத்தநாள் காலை, அருள்பணியாளர் அவ்விடம் சென்றபோது அதிர்ச்சி அடைந்தார். அவ்வூர் மக்கள், சூரிய மணிக்காட்டிக்கு மேல் கூரை ஒன்றை அமைத்திருந்தனர். வெயில், மழை இவற்றால் சூரிய மணிகாட்டி பாதிக்கப்படாமல் காக்கும்பொருட்டு அந்தக் கூரையை அமைத்ததாக, அம்மக்கள், அருள்பணியாளரிடம் கூறினர்.

மூவொரு இறைவன் என்ற மறையுண்மையை சூரிய மணிகாட்டியாகவும், நம்மை, அந்தப் பழங்குடியினராகவும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூவொரு இறைவனின் மறையுண்மை, நமக்கு வழங்கப்பட்டுள்ள அற்புதமான கொடை. இக்கொடையைப் பெற்றுள்ள நாம், இம்மறையுண்மையை நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதைப் பாதுகாப்பாக வைக்கவேண்டுமென்ற ஆர்வத்தில், அழகியக் கோவில்களை எழுப்பி, அல்லது, மூவொரு இறைவனை, இறையியல் கருத்துக்களாக நூல்களில் எழுதி, அவற்றில், இம்மறையுண்மையை ஒரு காட்சிப் பொருளாக வைத்து, அழகுபார்க்கிறோம். இம்மறையுண்மையை வழிபாட்டிற்குரிய ஓர் உண்மையாக மட்டுமே வணங்குகிறோமே தவிர, நம் வாழ்வின் ஆதாரமாகப் பயன்படுத்தத் தயங்குகிறோம்.

இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவனின் இலக்கணமே உறவு. நம் இறைவன் உறவுகளின் ஊற்று. அப்படியிருக்க, நாமும் உறவுகளுக்கு முதன்மையான, முக்கியமான இடம் தரவேண்டும் என்பதுதானே அந்தப் பாடம்?

உறவுகளுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடத்தைத் தந்திருக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க இன்று நாம் கொண்டாடும் மூவொரு இறைவன் பெருவிழா நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைவிட, செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது, போலியான கொண்டாட்டங்களில் ஈடுபடுவது என்ற மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை, உறவுகளின் ஊற்றாய் விளங்கும் மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம்.

நாமும் நமது தலைமுறைகளும் இறைவன் காட்டும் வழியில் நடக்கும்போது, அவரது அசீரால் நிறைவோம் என்பதை மோசே இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். மோசே தரும் ஆசி மொழிகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:

இணைச்சட்டம் 4: 40

நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.