மே,23,2018. மனிதாபிமான பணியாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவது கவலை தருகின்றவேளை, மனிதாபிமான உதவிகளை, அரசியல் மற்றும் இராணுவ நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.பாதுகாப்பு அவையில் கூறினார்.
ஆயுத மோதல்களில் அப்பாவி குடிமக்களின் பாதுகாப்பு குறித்து, நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில், ஐ.நா. பாதுகாப்பு அவை நடத்திய பொது விவாதத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.
இராணுவத்தின் ஆதாயத்திற்காக, அப்பாவி குடிமக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை மருத்துவ உதவிகளை மறுக்கும் எந்த ஒரு போரிடும் குழுவும் கண்டிக்கப்பட வேண்டியது எனவும், பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.
சிரியாவிலும், நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் ஒதுக்குப்புற கிராமங்களிலும் இடம்பெற்றுள்ள கொடூரங்கள், தென் சூடானையும், ஏமனையும் பாதித்துள்ள கடும் பஞ்சமும், பாதுகாப்பற்ற உணவும், இன்னும், உலகின் பல பகுதிகளில் அப்பாவி மக்கள் குறிவைத்து தாக்கப்படுவதும் கவலை தருகின்றன எனவும் பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.
ஐ.நா. பொதுச் செயலர் குறிப்பிட்டுள்ளது போன்று, ஆயுத மோதல்கள் இடம்பெறும் சூழல்களில் பெண்கள் மற்றும் சிறார் உட்பட இரண்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என்றும், 14 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார், பேராயர் அவுசா.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |