2018-05-21 15:43:00

வாரம் ஓர் அலசல் – மனமே மாறுவாயா


மே,21,2018. ஒரு சமயம், அரசர் ஒருவர், தனது தலைநகரத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். ஓரிடத்தில் ஓர் அழகான தோட்டத்தைப் பார்த்தார். இந்த இடத்தில் தனக்கு ஓர் அரண்மனை கட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைத்து, நிலத்தின் உரிமையாளர் பற்றி விசாரிக்கச் சொன்னார் அரசர். ஒரு குடிசையில் குடியிருக்கும் ஒரு வயதான பாட்டியின் நிலம் அது என, அதிகாரிகள் சொன்னார்கள். உடனே அரசர், அந்த நிலத்திற்கு உள்ள விலையை நிர்ணயம் பண்ணி, பணத்தை அந்தப் பாட்டியிடம் கொடுக்குமாறுச் சொன்னார் அரசர். அதிகாரிகள் அந்தப் பாட்டியிடம் சென்றபோது, இது எங்களது பரம்பரைச் சொத்து. இதை விற்க மாட்டேன் என்று பிடிவாதமாகச் சொன்னார் பாட்டி. விலையை இரண்டு மடங்காகக் கூட்டித் தருகிறோம் என்று சொன்னாலும், பாட்டி அதற்கு இணங்கவில்லை. இதனால் கோபமுற்ற அரசர், அந்தக் குடிசையைப் பிரித்து, அந்தப் பாட்டியை அவ்விடத்தைவிட்டு விரட்டி விடுமாறு உத்தரவிட்டார். அந்த இடத்தில் ஒரு மாளிகையையும் கட்டினார் அரசர். தங்குவதற்கு குடிசையின்றி தவித்த அந்தப் பாட்டி, அந்த நாட்டில் வாழ்ந்த ஒரு ஞானியைத் தேடிச்சென்று அவரிடம் முறையிட்டு அழுதார். ஞானியும் அரசரைச் சந்திப்பதற்கு வாய்ப்புத் தேடினார். இதற்கிடையே ஒருநாள், அரசரே ஞானியை அழைத்திருந்தார். ஞானியும், வெறுங்கையோடு போகாமல், கூடவே ஒரு கழுதையை ஓட்டிக்கொண்டு, அதன்மீது கொஞ்சம் கோணிச் சாக்குகளையும் வைத்துக்கொண்டு போனார். இதைப் பார்த்த அரசருக்கும், ஏனையோருக்கும் வியப்பு. அரசரைப் பார்த்து பேசிவிட்டு, அவரிடமிருந்து விடைபெறும்போது, அரசே, மன்னிக்கணும், உங்க தோட்டத்திலேர்ந்து கொஞ்சம் மண் எடுத்துக்கிட்டுப் போக ஆசைப்பட்றேன் என்று சொன்னார் ஞானி. ஓ தாராளமாக என்று அரசர் சொல்ல, ஞானியும் மண்ணை வெட்டி ஒரு சாக்கில் நிரப்பினார். பின் அரசரிடம், இந்த சாக்கு மூட்டையை கழுதையின்மீது வைப்பதற்கு உதவிசெய்யுங்கள் என்றார் ஞானி. மூட்டையைத் தூக்கிப் பார்த்த அரசருக்கு அதை நகர்த்தவே முடியவில்லை. உடனே ஞானி அரசரிடம், இந்த ஒரு சாக்கு மண்ணையே உங்களால தூக்க முடியல, அந்த வயதான பாட்டியிடமிருந்து அபகரித்த இந்த தோட்டம் முழுவதையும் சுமக்க ஆசைப்படுகிறீர்களே, அது உங்களால் முடியுமா என்று கேட்டார். சிந்தித்தார் அரசர். தனது செயலுக்காக வருந்தி, உடனே அந்தப் பாட்டியை வரவழைத்து, தனது தவறுக்காக மன்னிப்புக் கேட்டார் அரசர். பின்னர் அந்த மாளிகை, தோட்டம் இரண்டையுமே பாட்டியிடம் அளித்துவிட்டார் அரசர்.

பணம், பதவி, புகழ் ஆகிய மூன்று காரியங்களால் ஒருவருக்கு கர்வம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமாக பெரிய பொறுப்பிலுள்ளவர்கள், கர்வம் தங்கள் கண்களை மறைக்காமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த உலகத்திலிருந்து போகும்போது எதை எடுத்துச் செல்லப் போகிறோம்? 33 வயதுக்குள் இந்த உலகையே ஆள நினைத்த கிரேக்க பேரரசர் அலெக்சாண்டர், தனது மரணப்படுக்கையில் கூறியது நமக்கு நினைவிருக்கலாம். திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் அவர்கள், மாவீரன் அலெக்ஸாண்டரை, இரும்புப்பறவை என்று வருணிக்கிறார். இரத்தமும் யுத்தமும் இவன் தாய்ப்பால், வீரமும் விவேகமும் இவன் ஆயுதம், கம்பீரமும் அழகும் இவன் சக்தி, எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க வைத்த கிரேக்கப்புயல்! உலக வரைபடத்தை நிர்ணயம் செய்யும் அளவில் உலக தேசங்களை தன் எஃகு பாதையில் நசுக்கி வைத்திருந்த ஓர் இரும்புப்பறவை என வியக்கிறார் பா.விஜய். ஒரேயோர் அணு ஆயுதமே அபாயகரமானதென்றால், ஒவ்வோர் அணுவையுமே ஆயுதமாகக் கொண்ட மனிதன் எத்தகையவன்! உலகாளும் கர்வம், அலெக்ஸாண்டரின் கண்களில் தெரிவதைக் கவனித்த அரிஸ்டாடில், நூற்றுக்கணக்கான நுணுக்கங்களை அவருக்கு கற்றுக்கொடுத்தார் எனச் சொல்லப்படுகிறது. தனது இருபதாவது வயதில் அரியணையில் அமர்ந்த அலெக்ஸாண்டர், அடுத்த 13 ஆண்டுகளில் துருக்கி, எகிப்து, ரஷ்யா என்று பல நாடுகளைத் தன் காலடியில் கொண்டு வந்தார். ஆனாலும் அவர், தனது மரணப்படுக்கையில், தனது தளபதியை அழைத்து தனது மூன்று விருப்பங்களையும், அதற்குரிய காரணங்களையும் சொன்னார்.

இந்தக் கல்லறையில் உறங்குபவன் உலகையே வென்றவன் எனப் பொறித்து விடுங்கள். ஆனால், போகும்போது எதையும் எடுத்துச்செல்லவில்லை என்பதை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, எனது இறுதி ஊர்வலத்தின்போது என் கைகளை வெளியே தெரியும்படி கொண்டு செல்லுங்கள். எந்த மருத்துவராலும் என்னை குணமாக்க முடியவில்லை மற்றும் மருத்துவர்களால் போகும் உயிரை நிறுத்த முடியாது என்பதை உணர்த்துவதற்காக, என்னுடைய சவப்பெட்டியை என்னுடைய மருத்துவர்களே தூக்கிச் செல்ல வேண்டும். ஒரு மனிதர் இறந்தபிறகு, தான் சம்பாதித்ததில் சிறு துரும்பைக்கூட எடுத்துச் செல்ல முடியாது, எனவே, பணம், பொருள், பதவி மீது ஆசை கொண்டு அலைவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த, என்னுடைய இறுதிப் பயணத்தின்போது, கல்லறை வரை வழியெங்கும் நான் சம்பாதித்த தங்க, வைர, வைடூரிய பொருட்களைத் தெளித்தபடி செல்ல வேண்டும். ஒருவர் பிறக்கும்போது எதுவும் கொண்டு வரவில்லை, இறந்தபிறகும் எதுவும் எடுத்துச் செல்வதில்லை என்பதை இந்த உலகத்துக்கு உணர்த்த அலெக்ஸாண்டர் முத்தான மூன்று கடைசி ஆசைகளை விட்டுச் சென்றார் என ஏடுகள் கூறுகின்றன.

இந்நாள்களில் நடைபெறும் அரசியல் நாடகங்களைப் பார்த்து வருகிறோம். உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லப்படும்  இந்தியாவின் தற்போதைய நிலையை சனநாயகப் படுகொலை என்று விமர்சிக்கின்றனர். பதவி, பணம், புகழ் என கர்வம் வந்துவிட்டாலே ஏனைய மனிதநேய விழுமியங்கள் எல்லாம் மனசாட்சிகளில் செத்து விடுகின்றன. மேலும், தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில், அரசுத்தலைவர் நிக்கோலாஸ் மதுரா அவர்களுக்கு எதிராகப் போராட்டங்களும், வறுமையினால் ஏராளமான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதும், தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. நோயுற்ற மக்களுக்குப் போதிய மருந்துகள் இல்லை. அப்பாவி மக்கள், பசி பட்டினியால் துன்புறுகின்றனர். இதனால் நாட்டில் தொடர்ந்து பதட்டநிலைகள் காணப்படும்வேளை, அந்நாட்டில் இஞ்ஞாயிறன்று நடந்துள்ள பொதுத் தேர்தல்களில், அரசுத்தலைவர் மதுரா அவர்கள் மீண்டும் இரண்டாம் முறை வெற்றி பெற்றுள்ளார் என செய்திகள் கூறுகின்றன. மதுரா அவர்கள் மீது, நாட்டின் ஏறக்குறைய எண்பது விழுக்காட்டு மக்கள் திருப்தியின்றி இருக்கின்றனர் எனவும் கூறப்படுகின்றது. வெனெசுவேலாவில் பெருமளவான மக்கள் அனுபவிக்கும் கடுந்துன்பங்கள் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அந்நாட்டு ஆயர்களும் அடிக்கடி கவலை தெரிவித்து வருகின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர், எனதன்புமிக்க வெனெசுவேலாவில், மக்கள் அமைதியும் ஒன்றிப்பும் நிறைந்த பாதையைக் கண்டுகொள்வதற்கு, தூய ஆவியார், அனைவருக்கும் ஞானத்தை அருளுமாறு செபித்தார். அந்நாட்டில் எதிர்க்கட்சியினர் ஏராளமாக அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் கலவரங்கள் ஏற்பட்ட ஓரிரு நாள்களில், அந்நாட்டின் மற்றொரு சிறையில், இச்சனிக்கிழமை இரவில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மத்திய கிழக்குப் பகுதிக்கு, குறிப்பாக சிரியா மற்றும் புனித பூமியில் அமைதி நிலவவும் திருத்தந்தை தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார்.

ஒருநாள் சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டதாம். நான் உன்னைவிட மிகவும் பலசாலி. ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன், ஆனால் நீ அதை எளிதாகத்  திறந்துவிடுகிறாய், அதெப்படி என்று. சாவி சொன்னதாம் – நீ என்னைவிட பலசாலி என்பதை ஏற்றுக்கொள்கிறேன். நீ பூட்டைத் திறக்க அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் அதன் இதயத்தைத் தொடுகிறேன் என்று.

நிலையில்லா இந்த வாழ்க்கையில் சேகரித்த பணம் பொருள் பதவி பட்டம் எல்லாமே நம் இறப்போடு உடன் வருவதில்லை. இவ்வுலைவிட்டுப் போகும்போது வெறுங்கையோடுதான் போகிறோம். அந்த நாள் எங்கு, எப்போது, எப்படி என யாருக்குமே தெரியாது. நிலையில்லாத உலகில், உறவும் நிலையற்றது. அன்பு ஒன்று மட்டுமே வாழ்வுக்குப் பொருளும், பெருமையும், அர்த்தமும் கொடுப்பது. எப்போது எப்படி எங்கு பிறந்தாய், எப்படி வாழ்ந்தாய் என்பது அல்ல, எதை விட்டுச் செல்கிறாய் என்பதே முக்கியமானது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.