2018-05-19 12:03:00

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா - ஞாயிறு சிந்தனை


தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா - ஞாயிறு வாசகங்கள்

I              திருத்தூதர் பணிகள் 2: 1-11

II            கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5 : 16-25

யோவான் நற்செய்தி 15 : 26-27; 16 : 12-15

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா - ஞாயிறு சிந்தனை

உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று தூய ஆவியாரின் பெருவிழா. இப்பெருவிழாவை, ‘பெந்தக்கோஸ்து’ என்று அழைக்கிறோம். ‘பெந்தக்கோஸ்து’ என்ற சொல்லுக்கு, ‘ஐம்பதாம் நாள்’ என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில் தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று நாம் கொண்டாடி மகிழ, பல ஞாயிறுகள் தொடர்ந்து வந்தன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா, கிறிஸ்துவின் திரு இருதயத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க இம்மறையுண்மைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்த ஒவ்வொரு நிகழ்வும் முதன் முதலில் நடந்தபோது, அமைதியாய் நடந்தன.

எப்போது, எப்படி நடந்ததென்றே தெரியாமல் அமைதியாக நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை, உயிர்ப்பு. நெருங்கியச் சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம், விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் விழாவோ, அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. அந்த மேலறை அனுபவத்திற்குப் பின், எருசலேமில் இருந்தோர் பலருக்கு இந்தப் பெருவிழாவின் தாக்கம் வெளிப்பட்டது என்று இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள். விழா என்ற எண்ணத்திற்கு இவ்வுலகம் வகுத்துள்ள இலக்கணத்திற்கு முற்றிலும் மாறுபட்டதோர் இலக்கணத்தை இவ்விழாக்கள் வகுத்துள்ளன.

உலக விழா என்ற இலக்கணத்தில், கொண்டாட்டம் எதற்காக என்பதைவிட, கொண்டாட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப்பொருத்தே அந்த விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத் தெரியவரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவைகளே இவ்விழாக்களின் உயிர்நாடிகளாய் உள்ளன. இந்த விழாக்கள் எதற்காக கொண்டாடப்பட்டன என்று அடுத்தநாள் கேட்டால்கூட, நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.

கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் தந்து, நமக்குப் பாடங்களையும் சொல்லித்தந்தனர் இயேசுவும் அவரது சீடர்களும். கொண்டாட்டம் என்பது எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே அமையவேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள்அர்த்தம் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்க வேண்டும். இவ்விதம் கொண்டாடப்படும் விழாக்கள் ஒருநாள் கேளிக்கைகளாகக் கடந்துபோகாமல், வாழ்நாளெல்லாம் நம்முள் மாற்றங்களை உருவாக்கும் கருவிகளாக அமையும்.

இத்தகையப் பாடங்களை நமக்குச் சொல்லித்தரும் விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள். தூய ஆவியாரின் பெருவிழா நமக்குச் சொல்லித்தரும் மற்றொரு முக்கிய பாடம் - அவர் வானிலிருந்து இறங்கிவந்து சிறிது காலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடும் இறைவன் அல்ல, மாறாக, அவர் நமக்குள் எப்போதும் உறைந்திருக்கும் இறைவன் என்ற உண்மை. ஒரு கணமும் நம்மைவிட்டு விலகாமல் வாழும் இறை ஆவியாரை உணராமல் நாம் தேடிக்கொண்டிருப்பது, மீன் ஒன்று, கடல் நீரில் நீந்திக்கொண்டே, கடலைத் தேடியதைப் போன்ற ஒரு நிலை.

கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கப்பலொன்று தரைதட்டி நின்றது. ஒரு வாரமாக முயன்றும் கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. கப்பலில் ஓரளவு உணவு இருந்ததால், அவர்களால் சமாளிக்க முடிந்தது. ஆயினும் அவர்களிடமிருந்த குடிநீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அவர்கள் தாகத்தால் துடித்தனர்.

அப்போது அவ்வழியே வந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்களிடம், "எங்களுக்குக் குடிநீர் தேவை" என்ற செய்தியை அனுப்பினார் கப்பல் தலைவர். "நீங்கள் இருக்கும் இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்துப் பருகுங்கள்" என்ற பதில் செய்தி வந்தது. கப்பல் தலைவருக்கு கடும்கோபம். கடல் நீரைக் குடிக்கச் சொல்வதற்கு இவர்கள் யார் என்று அவர் வெறுப்புடன் கீழ்த்தளத்திற்குச் சென்றார். அவர் சென்றபின், அருகிலிருந்த உதவியாட்களில் ஒருவர், தங்கள் கப்பல் நின்ற இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்தார். அந்த நீரை அவர் சுவைத்தபோது, அது சுத்தமான குடி நீர் என்பதை உணர்ந்தார். அந்தக் கப்பல் தரைதட்டி நின்ற இடம், பெரும் நதியொன்று கடலில் கலக்கும் இடம். சுவையான குடிநீர் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், நாம் தாகத்தால் தவிக்க முடியும்.

ஊரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தார் ஒருவர். அதே இடத்தில் உறங்குவார். பல ஆண்டுகள் அதே இடத்தில் தர்மம் கேட்டு வாழ்ந்தவர், ஒருநாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவர் தர்மம் கேட்டு அமர்ந்திருந்த இடத்திலேயே அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டியபோது, அவர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் விலைமதிப்பற்ற ஒரு புதையல் கிடைத்தது.

புதையலுக்கு மேல் அமர்ந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் தர்மம் கேட்ட இவரைப் போல, நல்ல நீர் சூழ்ந்திருந்த நீர்பரப்பில் நின்றுகொண்டே தாகத்தால் துடித்த கப்பல் பயணிகளைப் போலத்தான் நாமும்... வாழ்வுப் பயணத்தில் நம்மைச் சூழ்ந்துள்ள எத்தனையோ நன்மைகளை உணராமல், நமக்குள் புதைந்திருக்கும் கருவூலங்களை தெரிந்துகொள்ளாமல், தாகத்தில், தேவையில் துடிக்கிறோம். நம்முள் ஊற்றெடுக்கும் நன்மைகளைப் புரிந்துகொள்ளாமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை நாம் துரத்துவதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணாக்குகிறோம். பல நேரங்களில், இந்தப் பொய்யான மாயைகளைப் பெறுவதற்கு நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவற்றை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.

நமக்குள் இருக்கும் நல்லவற்றை நமக்குத் தெளிவுபடுத்தும் அணையாத ஒளியாக, நமக்குள் நல்லவற்றை ஒவ்வொருநாளும் பிறப்பிக்கும் வற்றாத ஊற்றாக நம்முள் எப்போதும் உறைந்திருக்கும் இறைவன், தூய ஆவியார். இவரது பெருவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில், இவர் நம்முள் உறையும் இறைவன் என்பதை, முழுமையாக நம்பும் வரத்தை, ஒவ்வொருவருக்காகவும் வேண்டுவோம்.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்... தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவையின் பிறந்தநாள். ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும்போது, அக்குழந்தையைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். திருஅவை என்ற குழந்தை பிறந்தபோதும் பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. திருஅவை என்ற குழந்தை பிறந்த விதம், பிறந்ததும் அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் இவற்றை நாம் சிந்திப்பது பயனளிக்கும்.

திருஅவை என்ற குழந்தை பிறந்தது, ஒரு குழுவில், ஒரு குடும்பத்தில். தூய ஆவியார் தீ நாவுகளாய் இறங்கிவந்த அனுபவம், தனியொரு மனிதருக்கு, காட்டின் நடுவில், அல்லது மலை உச்சியில் ஏற்பட்ட ஓர் அனுபவம் அல்ல. அன்னை மரியாவுடன் செபத்தில் இணைந்திருந்த சீடர்கள் நடுவில், தூய ஆவியார் இறங்கி வந்தபோது, திருஅவை பிறந்தது.

பொதுவாக, ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் ஒருவருக்கு, இறை அனுபவம் கிடைக்கும் என்று, ஏறத்தாழ, எல்லா மதங்களும் சொல்கின்றன. கிறிஸ்தவத் திருமறையில், இத்தகைய தனிப்பட்ட அனுபவத்துடன் நாம் நின்றுவிடுவதில்லை. குழுவாய், குடும்பமாய் நாம் இணைந்து வரும்போதும், ஆழ்ந்த இறை அனுபவம் உருவாகிறது என்பதை, தூயஆவியாரின் வருகைப்பெருவிழா நமக்குச் சொல்லித் தருகிறது.

அர்த்தமுள்ள வகையில் மனிதர்கள் இணைந்து வருவதைத் தடுக்கும் வழிகள் இன்று உலகில் பெருகி வருகின்றன. பொதுவாகவே, நாம் வாழும் இன்றைய உலகம், நம் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, அந்தத் தனிமையில் நாம் நிறைவைக் காணமுடியும் என்ற மாயையை உருவாக்கி வருகிறது. நம்மைச்சுற்றி வளர்ந்துள்ள தொடர்புசாதனக் கருவிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆனால், அதே வேளையில் இக்கருவிகள் நம்மை உண்மையிலேயே இணைக்கின்றனவா? அல்லது இக்கருவிகளின் தோழமையால் நாம் மனித உறவுகளை, தொடர்புகளை இழந்து வருகிறோமா? என்ற கேள்விகள் எழுகின்றன. கருவிகள் இல்லாமல் தொடர்புகள் இல்லை என்ற அளவு, கருவிகளின் ஆக்கிரமிப்பு வளர்ந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவை என்ற குழந்தை பிறந்த நாள் நமக்குச் சொல்லித் தரும் பாடம் இதுதான்: திருஅவை என்பது, நானும், கடவுளும் என்ற, தனிப்பட்ட அனுபவம் அல்ல, குழுவாக, குடும்பமாக நாம் உணரும் ஓர் அனுபவமே திருஅவை.

திருஅவை என்ற குழந்தை பிறந்ததும், அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் என்ன? இன்றைய முதல் வாசகத்தில், திருத்தூதர் பணிகள் நூலில் நாம் வாசிக்கும் வரிகள் இவை: "அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்." (திருத்தூதர் பணிகள் 2:4) திருஅவை என்ற குழந்தை பிறந்ததும், பேசத் துவங்கியது; அதுவும், பல்வேறு மொழிகளில், பேசத் துவங்கியது.

தூய ஆவியாரின் வருகையால் பிறந்த திருஅவை, பிறந்ததும், உலகிற்குச் சொல்லித்தந்த அழகானப் பாடங்களில் ஒன்று... மனித இதயங்கள் இணைந்து வரும்போது, மனிதர்கள் உருவாக்கிய மொழி என்ற எல்லை தேவையில்லை என்ற முக்கியமானப் பாடம். அதிலும், நம் இதயங்கள் இணைந்து பேசுவது இறைவனின் அருஞ்செயல்கள் என்றால், அங்கு மொழியே தேவையில்லை என்பதையும், தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது.

தூய ஆவியாரால் மனித குலம் ஆட்கொள்ளப்பட்டால், அங்கு உருவாகும் அழகிய வாழ்வைத் திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் விவரிக்கிறார். தூய ஆவியாரின் பெருவிழா, வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக மாறுவதற்கு, அந்த ஆவியாரின் கொடைகளை, கனிகளை நாம் பெற வேண்டும். இந்த எண்ணங்களைக் கூறும் பவுல் அடியாரின் சொற்களோடு நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்:

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5 : 16, 22-23, 25

தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்... தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.