2018-05-19 14:58:00

அக்டோபர் 14, திருத்தந்தை ஆறாம் பவுல் உட்பட 6 புதிய புனிதர்கள்


மே,19,2018. அருளாளர்கள் திருத்தந்தை ஆறாம் பவுல், ஆஸ்கார் ரொமேரோ, பிரான்செஸ்கோ ஸ்பினெல்லி, வின்சென்சோ ரொமானோ, மரிய கத்தரீனா காஸ்பர், இயேசுவின் தெரசின் நசரியா இஞ்ஞாசியா ஆகிய ஆறு பேரையும், திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள், வருகிற அக்டோபர் 14ம் தேதி புனிதர்கள் என அறிவிப்பார்.

இச்சனிக்கிழமை காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் அப்போஸ்தலிக்க மாளிகையில் வழிபாட்டுடன் ஆரம்பித்த கர்தினால்கள் அவையில், இந்த ஆறு அருளாளர்களும், இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் வருகிற அக்டோபர் 14ம் தேதி, புனிதர்கள் என அறிவிக்கப்படுவார்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார்.

ஜொவான்னி பத்திஸ்தா மொந்தினி என்ற இயற்பெயரைக்கொண்ட அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள்,1963ம் ஆண்டு ஜூன் 21ம் தேதியன்று பாப்பிறைப் பணியைத் தொடங்கி, 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இறைபதம் அடைந்தார். இவர், வட இத்தாலியின் கொன்சேசியோவில், 1897ம் ஆண்டு பிறந்தவர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.