2018-05-18 15:39:00

சிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்


மே,18,2018. இயேசுவின் மலைப்பொழிவு போதனைகளை, அன்னை மரியைப் போல் வாழ்ந்தவர்கள் வேறு யாருமில்லை. புனிதர்களில் புனிதராக விளங்கும் அன்னை மரியா, புனிதத்துவத்திற்குரிய பாதையை நமக்குக் காட்டுகிறார் மற்றும் நம்மோடு உடன் வருகிறார் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், உடன்பிறப்பு உணர்வுடன், சிலே நாட்டு ஆயர்களுடன் நடத்திய மூன்று நாள் கூட்டத்தின் இறுதியில், தனது நன்றியைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, அதில் கலந்துகொண்ட 34 சிலே ஆயர்களிடம் கொடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அண்மை பத்தாண்டுகளில் தென் அமெரிக்க திருஅவைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ள, அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் பற்றி, 34 சிலே ஆயர்களுடன் கடந்த மூன்று நாள்களாக, மிக கருத்தாய் கலந்துரையாடிய பின்னர், இக்கடிதத்தை அளித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு தான் விடுத்த அழைப்பை ஏற்று வத்திக்கான் வந்து, மனம் திறந்த உரையாடலில் ஈடுபட்டதற்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, சிலே நாட்டில் இறைவாக்குத் திருஅவையைக் கட்டியெழுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

பசித்திருப்போர், கைதிகள், புலம்பெயர்ந்தோர், உரிமை மீறப்பட்டோர் ஆகியோரில் ஆண்டவருக்குச் சேவை செய்யுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, நீதி மற்றும் திருஅவையின் ஒன்றிப்பைக் காக்கும் நோக்கத்தில், அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டோர்க்கு, குறுகிய மற்றும் நீண்டகாலத் தீர்மானங்களை அமல்படுத்துமாறு கூறினார்.

மேலும், இந்த மூன்று நாள் கூட்டத்திற்காக, திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிலே ஆயர்கள், சிலே தலத்திருஅவையில் அருள்பணியாளர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்யவும், நீதியை நிலைநாட்டவும், சிலே நாட்டில் திருஅவையின் இறைவாக்குப் பணிக்கு புதிய உந்துதல் கொடுக்கவும் உறுதி எடுத்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.