2018-05-17 16:08:00

'புதிய மலேசியா' நீதியும், சுதந்திரமும் தரவேண்டும் - ஆயர்கள்


மே.17,2018. மே 9ம் தேதி, மலேசிய மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள மாற்றம், இந்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள பொன்னான வாய்ப்பு என்றும், இந்நாட்டின் எதிர்காலம் மக்கள் கரங்களில் உள்ளதென்றும் மலேசிய ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த 'தேசிய முன்னணி' என்ற கட்சியை, எதிர்கட்சி வெற்றியடைந்துள்ளது, மலேசியாவின் வரலாற்றில் முதன் முறையாக நிகழ்கிறது என்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, மக்கள், நன்றியையும், செபங்களையும் எழுப்ப, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு முந்திய நவநாள் முயற்சி தகுந்ததொரு தருணம் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் தேர்ந்தெடுத்துள்ள 'புதிய மலேசியா' அனைவருக்கும் நீதியையும், சுதந்திரத்தையும் உறுதி அளிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்" (1 யோவான் 4:12) என்ற விவிலியச் சொற்களை தங்கள் அறிக்கையில் மேற்கோளாகப் பயன்படுத்தியுள்ள ஆயர்கள், அன்பின் அடிப்படையில் இந்நாட்டின் காயங்கள் குணமாகி ஒற்றுமை வளரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.