2018-05-14 16:02:00

தூய ஆவியாரால் வழிநடத்தப்பட அனுமதிப்பதே உயரிய சுதந்திரம்


மே,14,2018. 'தூய ஆவியாரால் நாம் வழிநடத்தப்பட்டு அவர் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட அனுமதிப்பதைவிட, மேலான சுதந்திரம் எதுவும் இல்லை', என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தி, பாத்திமா அன்னையின் திருவிழாவை மையப்படுத்தி அமைந்திருந்தது.

 'பாத்திமா அன்னை மரியாவே, எம்மை நோக்கியும், எம் குடும்பங்களை நோக்கியும், எம் நாடுகளை நோக்கியும், இவ்வுலகை நோக்கியும் உமது பார்வையைத் திருப்பியருளும்' என்ற வேண்டுதல், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியானது.

மே மாதம் 13ம் தேதி, உலக சமூகத் தொடர்பு நாளும் சிறப்பிக்கப்பட்டதால், அதே நாளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், 'அனைத்து மக்களுக்கு, குறிப்பாக, தங்களுக்கென குரலெழுப்ப முடியாத மக்களுக்கு உதவும் நோக்கத்தில், அமைதிக்கென உழைக்கும் இதழியல் துறையை ஊக்குவிக்குமாறு சமூகத் தொடர்புத் துறையினருக்கு அழைப்பு விடுக்கிறேன்' என, அதில் விண்ணப்பித்துள்ளார்.

இதற்கிடையே, ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி, உரோம் நகருக்கு வந்திருந்த தாய்வான் நாட்டின் 7 ஆயர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.