2018-05-08 15:48:00

மே 10ல் Nomadelfia, Loppianoவில் மேய்ப்புப்பணி பயணம்


மே,08,2018. “பாவிகளாகிய நம்மீது இயேசு இரக்கம் காட்டுமாறு, செபமாலை அன்னை மரியிடம் செபிப்போம்” என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தன் டுவிட்டரில், வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், மே 10, இவ்வியாழனன்று, இத்தாலியின் Nomadelfia, Loppiano ஆகிய இரு இடங்களுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வியாழன் காலை 7.30 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Nomadelfiaவில், அருள்பணி Zeno Saltini அவர்கள் கல்லறையில் செபித்த பின்னர், குடும்ப குழுக்களைச் சந்தித்து உரையாற்றுவார்.

எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், Fossoliயில், மரண முகாமாக இருந்த இடம் காலி செய்யப்பட்டதையடுத்து, உரோம் நகரிலிருந்து 120 கைவிடப்பட்ட சிறாரை அழைத்துச்சென்று, அவ்விடத்தை வாழ்வின் இடமாக மாற்றினார் அருள்பணி Zeno. Fossoliயில் ஆரம்பித்த அந்த இல்லத்தை, 1954ம் ஆண்டில் Nomadelfiaவுக்குக் கொண்டு வந்தார் அருள்பணி Zeno.

Nomadelfia மக்களைச் சந்தித்த பின்னர், பிளாரன்ஸ் நகருக்கு அருகேயுள்ள, Loppiano சென்று, Focolare இயக்கத்தின் ஆறாயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களைச் சந்தித்து உறையாற்றும் திருத்தந்தை, இந்நிகழ்வை நிறைவு செய்து, வியாழன் பகல் 12.35 மணிக்கு வத்திக்கான் வந்து சேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Nomadelfia, Loppiano ஆகிய இரு இடங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பயணம், அவர் இத்தாலியில் மேற்கொள்ளும் 22வது மேய்ப்புப்பணி பயணமாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.