2018-05-08 15:22:00

சாத்தானின் சோதனைக்கு எதிராகப் போராட அழைப்பு


மே,08,2018. சாத்தானின் மயக்கவலைகளில் சிக்கிக்கொள்ளாமல், அவை குறித்து விழிப்பாயிருக்குமாறும், சாத்தானின் சோதனைகளை எதிர்த்துப் போராட வேண்டுமென்றும், இச்செவ்வாய் காலை மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யோவான் நற்செய்தி, பிரிவு 16, 5 முதல் 11 வரையுள்ள திருச்சொற்களை மையப்படுத்தி மறையுரையாற்றியவேளை, கட்டுண்டுள்ள வெறிநாயைத் தடவுகையில் அது கடித்துவிடுவது போல, தீய நெறிக்கு இட்டுச்செல்லும் சாத்தானோடு பேசும்போது, அது மிகவும் ஆபத்தானது என்று கூறினார்.

சாத்தானிடம் நெருங்கிச் செல்ல வேண்டாமெனவும், நம் பெருமை, பிறர் காரியங்களில் தலையிடுவதில் ஆர்வம் போன்றவற்றில் நம்மை வீழ்த்துவதற்குச் சாத்தானுக்கு நன்றாகவே தெரியும், எனவே நாம் சோதனையில் வீழ்ந்துவிடாமல் இருக்குமாறு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு கூறுவது போல, நாம் விழிப்பாயிருந்து, நோன்புடன் செபம் செய்யுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, இதுவே சோதனைகளை வெல்வதற்கான வழி என்றும் கூறினார்.   

பிள்ளைகள் பயப்படும்போது தாயிடம் செல்வதுபோல, நாமும், ஆன்மீக வாழ்வில் கலங்கி நிற்கையில், இறைவனின் அன்னையிடம் அடைக்கலம் தேடுவோம் எனவும், மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.