2018-05-07 16:24:00

முன்னாள் திருத்தந்தையின் 'விடுதலைக்கு விடுதலையளித்தல்'


மே,07,2018. விசுவாசத்திற்கும் அரசியலுக்கும் இடையே நிலவும் தொடர்பு குறித்து ஆய்வுசெய்வது, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் விருப்பமான விடயங்களுள் ஒன்று என, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அண்மை நூல் ஒன்றுக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'விடுதலைக்கு விடுதலையளித்தல். மூவாயிரமாம் இக்காலக்கட்டத்தில் விசுவாசமும் அரசியலும்'  என்ற தலைப்பில் முன்னாள் திருத்தந்தை எழுதியுள்ள அண்மை நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இளவயதில் நாத்ஸி ஆட்சியாளர்களின் கீழ் வாழ்ந்த திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள், அரசுக்கு எவ்வளவு தூரம் கீழ்ப்படிய வேண்டும் என்பதையும், இறைவனுக்கு எவ்வளவு தூரம் கீழ்ப்படிய வேண்டும் என்பதையும் தெளிவாகத் தெரிந்திருந்தார் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய அறிவாளியாகவும், மனிதாபிமானமிக்கவராகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எப்போதும் செயல்பட்டார் என கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும், ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்கும் இடையே காணப்படும் இடைவெளி குறித்து முன்னாள் திருத்தந்தை தன் எழுத்துக்களில் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

சுயநலப்போக்குகள் இன்றியும், தவறான கொள்கைகளால் மனச்சான்று ஆக்ரமிக்கப்படுவதை தவிர்த்தும்,  வாழவேண்டியதன் தேவையை முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வலியுறுத்தி வருவதை மீண்டும் காணமுடிகிறது என தன் முன்னுரையில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தையின் எழுத்துக்களில், மனித உரிமைகள் மதிக்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும், வருங்கால சமுதாயம் குடும்பங்கள் வழியே கடந்து செல்கின்றன என்பது குறித்தும் வலியுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.