2018-04-19 15:42:00

நாக்பூர் பேராயர் ஆபிரகாம் இறைவனடி சேர்ந்தார்


ஏப்.19,2018. இந்தியாவின் நாக்பூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய ஆபிரகாம் விருத்தகுலங்கரா (Abraham Viruthakulangara) அவர்கள், ஏப்ரல் 19, இவ்வியாழன் அதிகாலையில் இறைவனடி சேர்ந்தார்.

1943ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி கேரளாவில் பிறந்த ஆபிரகாம் அவர்கள், 1969ம் ஆண்டு, அக்டோபர் 28ம் தேதி, அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார்.

1977ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி, தன் 34வது வயதில் ஆயராக அருள்பொழிவு பெற்ற ஆபிரகாம் அவர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட கந்துவா (Khandwa) மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்றார்.

அங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியபின், 1998ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் தேதி, நாக்பூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக பொறுப்பேற்று, தன் 20 ஆண்டுகள் பணியை வருகிற ஞாயிறன்று நிறைவு செய்வதற்கு முன் இறையடி சேர்ந்தார்.

ஏப்ரல் 19, இவ்வியாழன் அதிகாலை, தன் 75வது வயதில் இறைவனடி சேர்ந்த பேராயர் அவர்களுக்கு இறைவன் நிறையமைதி வழங்க வேண்டுமென, இந்திய ஆயர் பேரவையின் செயலர் ஆயர் தியடோர் மாஸ்க்ரீனஸ் அவர்கள் பேரவை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.