2018-04-14 14:08:00

சிலே திருஅவையை புதுப்பிக்கும் திட்டத்தில் ஆயர்கள்


ஏப்.14,2018. சிலே நாட்டில், சிறார் பலர், பாலியல் கொடுமைகளை அனுபவித்தது குறித்த முழு உண்மைகளைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல், ஒரு சிலரைப் புண்படுத்தும் முறையில் தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு ஆயர்களுக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, சிலே திருஅவையில் புதுப்பித்தல் பணியை மேற்கொள்வதற்கு, ஆயர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த மாதம் திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கும்போது, சிலே நாட்டில் திருஅவையின் புதுப்பித்தலுக்காகத் தயாரித்துள்ள திட்டத்தை, திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கவுள்ளனர், ஆயர்கள்.

சிலே ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Santiago Silva Retamales அவர்கள், ஏப்ரல் 13, இவ்வெள்ளிக்கிழமையன்று, அந்நாட்டின் Cooperativa வானொலியில் இத்திட்டத்தை அறிவித்தார் என்று, CNA கத்தோலிக்க செய்தி கூறுகின்றது.

ஆயர் Juan Barros அவர்களின் நியமனத்தால் எழுந்த மனக்கசப்புக்களைக் குணப்படுத்தும் முயற்சியாக, சிலே ஆயர்கள் எடுத்துள்ள புதுப்பிக்கும் நடவடிக்கைகளை விவரித்துள்ளார், ஆயர் Silva Retamales.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு சனவரி மாதத்தில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டவேளையில், சிறார் பலர், பாலியல் கொடுமைகள் அனுபவித்தது குறித்தும், இக்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய ஆயர் Juan Barros அவர்கள் குறித்தும் கடுமையான விவாதங்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.