2018-04-14 15:14:00

உயிர்ப்புக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


வானமும், மண்ணும் இணைந்து வழங்கும் கொடைகளான நீரையும், உலோகத்தையும் மையப்படுத்தி தமிழ்நாட்டில் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக, கடந்த 60 நாட்களுக்கும் மேலாக, மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் ஒரு சில நல்ல விளைவுகளைக் கொண்டுவந்துள்ளதைப் போல் தெரிகிறது. உயிர்த்த இயேசுவின் அருளால், இம்மக்கள், தங்கள் பிரச்சனைகளுக்கு, முழுமையான தீர்வைப் பெறவேண்டும் என்ற வேண்டுதலுடன் நம் ஞாயிறு சிந்தனைகளைத் துவக்குவோம்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை, மக்களுக்கு, பல்வேறு கொடுமையான விபத்துக்களை விளைவித்துவருவதையும், அதை எதிர்த்துப் போராடிவரும் மக்கள் ஓரளவு உயிர்த்து வருகின்றனர் என்பதையும் எண்ணிப்பார்க்கும் வேளையில், மற்றொரு நாட்டில், தாமிரச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தும், அவ்விபத்திலுருந்து அம்மக்கள் உயிர்பெற்றெழுந்ததும் நம் நினைவுக்கு வருகின்றன.

2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி, சிலே நாட்டின் அட்டக்காமா (Atacama) பாலைநிலத்தில் அமைந்துள்ள, தாமிர, தங்கச் சுரங்கம் ஒன்றில் 33 தொழிலாளர்கள், தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால், ஏழு இலட்சம் டன் எடையுள்ள பாறைகள் சுரங்கப் பாதையை அடைத்துவிட்டன. அந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில் 2,500 அடி ஆழத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோற்றுப்போயின. 17 நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 22ம் தேதி, அவர்கள் உயிருடன் இருந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. அதையே ஒரு புதுமை என்று பலர் கூறினர்.

அக்டோபர் 12ம் தேதி, அதாவது, அத்தொழிலாளிகள் புதைக்கப்பட்டு, 69 நாட்களுக்குப் பின், சிலே அரசு, மீட்புப் பணியின் இறுதிக் கட்டத்தைத் துவக்கியபோது, சிலே நாட்டின் பல கோவில்களில், தொடர் செபவழிபாடுகள், உண்ணா நோன்பு என்ற பல ஆன்மீக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதையுண்டவர்களில் முதல் தொழிலாளி, அக்டோபர் 13ம் தேதி அதிகாலையில், சுரங்கத்தைவிட்டு வெளியேறியபோது, அந்நாட்டின் கோவில் மணிகள் அனைத்தும் ஒலித்தன. இறுதித் தொழிலாளி, அக்டோபர் 13, இரவு 10 மணியளவில் வெளியேறினார். இந்தச் சாதனை முடிந்ததும், அந்நாட்டின் ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Alejandro Karmelic அவர்கள், "சிலே நாடு, இன்று உயிர்ப்பின் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளது" என்று கூறினார்.

கல்வாரிக் கொடுமைகளுக்குப் பின், கதவுகளை மூடி, தங்களையே பூட்டி வைத்துக்கொண்ட சீடர்கள், இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின், அச்சமின்றி, இயேசுவை உலகறியச் செய்ததுபோல், முற்றிலும் மூடப்பட்டு, இனி வெளி உலகுடன் எந்தத் தொடர்பும் கிடைக்காது, இனி உயிரோடு மீளமாட்டோம் என்ற அச்சத்தில், சந்தேகத்தில் புதையுண்டிருந்த சிலே நாட்டு சுரங்கத் தொழிலாளிகள், வெளியே வந்தபின், பல நாடுகளுக்குச் சென்று இயேசுவை உலகறியச் செய்து வருகின்றனர். "அந்தச் சுரங்கத்தில் 33 பேர் புதைந்து போனோம். ஆனால் எங்களுடன் 34வது பேராக, இறைவன் எப்போதும் உடன் இருந்தார்" என்று இவர்கள் பறைசாற்றி வருகின்றனர்.

அழிவைக் கொணரும் நிலச்சரிவு, நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களிலிருந்து உயிர்கள் மீட்கப்படும் அற்புதங்கள் நிகழ்வதை நேரிலோ, அல்லது, தொலைக்காட்சியிலோ காணும்போது, நம்மையும் அறியாமல் கரவொலி எழுப்புகிறோம், நம் கண்களில் கண்ணீர் மல்குகிறது. மகிழ்வு, துயரம் இரண்டின் உச்சநிலைகளும் நம்பமுடியாத ஒரு நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகின்றன. “Oh my God, I can't believe this” “என் கடவுளே, என்னால் இதை நம்பவே முடியவில்லை” என்று, மகிழ்வின் உச்சத்தில் கத்தியிருக்கிறோம். இதே சொற்களை, துயரத்தில் புதைந்தபோதும் நாம் சொல்லிக் கதறியிருக்கிறோம். மகிழ்வின் சிகரத்தில் நிறுத்தப்பட்ட இயேசுவின் சீடர்களைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “சீடர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள்.” (லூக்கா நற்செய்தி 24: 41)

தனது உயிர்ப்பை நம்பமுடியாத அளவு வியப்பும், மகிழ்வும் அடைந்த சீடர்களை, இன்னும் அதிகமாய் வியப்பில் ஆழ்த்தி, உயிர்ப்பின் வல்லமையை இயேசு அவர்களுக்குக் காட்டுவற்குப் பதிலாக, தன் உயிர்ப்பை நிரூபிக்க, இயேசு செய்தது, மிகவும் எளிமையான, சர்வ சாதாரணமான ஒரு செயல். இது நம்மை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” (லூக்கா 24: 41) என்று இயேசு கேட்கிறார்.

உயிர்த்தபின், இயேசு, தன் சீடர்களைச் சந்தித்த பல நிகழ்வுகளில், உணவு ஒரு முக்கிய அங்கமாகிறது. தன் உயிர்ப்பை நிரூபிக்க, சீடர்களின் நம்பிக்கையை வளர்க்க, இயேசு, உணவை, ஒரு கருவியாகப் பயன்படுத்தியதை, நாம் இரு கோணங்களில் சிந்திக்கலாம்.

முதல் கோணம்: பொதுவாக எந்த ஒரு குடும்பத்திலும் நிகழ்வது. ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால், அதுவும், வாழவேண்டிய வயதில் ஒருவர் மரணம் அடைந்தால், அக்குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள், தாங்கமுடியாத துயரத்தில் மூழ்குவர். உணவும், உறக்கமும், அவர்களிடமிருந்து விடைபெறும். இப்படிப்பட்ட ஒரு சூழலில், அக்குடும்பத்தினர் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள், எப்பாடு பட்டாவது, அவர்களை உண்ணும்படி வற்புறுத்துவர்.

இந்தக் கோணத்தில் நாம் இயேசுவின் செயலைச் சிந்திக்கலாம். தனது மரணத்தால் மனமுடைந்து போயிருக்கும் சீடர்களும், அன்னை மரியாவும், கடந்த மூன்று நாட்களாக உண்ணாமல் இருந்ததால், அவர்களை மீண்டும் உண்ணும்படி வற்புறுத்தவே, இயேசு உணவைப் பற்றிப் பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பரிவுள்ள ஒரு தாயின் அன்பு, உயிர்த்த இயேசுவில் வெளிப்படுவதைக் காணலாம்.

இரண்டாவது கோணம்: இயேசுவும் அவரது சீடர்களும் கடந்த மூன்று ஆண்டுகள் பணிவாழ்வில் அதிகம் மூழ்கிப் போயிருந்தவர்கள். எனவே, நிம்மதியாக ஓர் இடத்தில் அமர்ந்து உணவு உண்ட நேரங்கள் மிகக் குறைவே. அப்படி அவர்கள் சேர்ந்து உணவு உண்ட அரிய நேரங்களில், அவர்கள் மத்தியில் உணவு மட்டும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. அத்துடன் சேர்த்து, உணர்வுகளும், உண்மைகளும் பகிரப்பட்டன. இந்த ஆழமான பரிமாற்றங்களின் உச்சமாக, மூன்று நாட்களுக்கு முன், அவர்கள் உண்ட அந்த இறுதி பாஸ்கா இரவுணவு அமைந்தது. அந்த இறுதி இரவுணவின் தாக்கம், இன்னும் அவர்கள் மனதில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. ஆழ்ந்த உறவை நிலைநாட்டிய அந்த இறுதி இரவுணவை மீண்டும் அவர்களுக்கு நினைவுறுத்த, இயேசு உயிர்த்த பின்பும், அவர்களோடு உணவருந்த வந்திருந்தார் என்றும் எண்ணிப் பார்க்கலாம்.

தன் பிரசன்னத்தை உலகில் தொடர்ந்து நிலைநாட்ட, இயேசு, இறுதி இரவுணவின்போது, உணவைப் பயன்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். உயிர்ப்புக்குப் பின்னரும், தனது பிரசன்னம், இவ்வுலகில் தொடர்கிறது என்பதை, சீடர்களுக்கு வலியுறுத்திக் கூறுவதற்காக, இயேசு மீண்டும் உணவை பயன்படுத்துகிறார். உயிர்ப்பு என்பது, நம்மை வியப்பிலும், பிரமிப்பிலும் ஆழ்த்தும், ஒரு மந்திரச் செயல் அல்ல. நமது சாதாரண, அன்றாட வாழ்வில், நம்முடன் இணைந்த ஓர் அற்புதமே உயிர்ப்பு, என்ற ஓர் உண்மையை, இந்த உணவுப் பகிர்தல் வழியே இயேசு சொல்லித்தந்தார். இந்த நிகழ்வின் வழியே, இயேசு தன் சீடர்களிடம் சொல்லாமல் சொன்னது இதுதான்:

"கல்வாரிச் சிலுவையும், கல்லறையும் நம் உறவை அறுத்துவிட்டதென நீங்கள் எண்ணுகிறீர்கள். சிலுவையும், கல்லறையும் நம் உறவை அழித்துவிட முடியாது.  உங்களுடன் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த நான், இதோ உங்களோடு வாழ்வைத் தொடர வந்துள்ளேன். எனவே, உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?" உணவின் வழியாக, உயிர்ப்பைப்பற்றியும், தொடரும் தன் உறவைப்பற்றியும் இதைவிட அழகான பாடங்களைச் சொல்லித்தர முடியுமா என்பது சந்தேகம்தான்.

உணவின் வழியாக உயிர்ப்பின் பேருண்மையைக் கூறிய இயேசு, அதற்கு முன்னதாக, காயப்பட்ட தன் கரங்களையும், கால்களையும் சீடர்களுக்குக் காட்டுகிறார். (லூக்கா 24: 40) அவை, மற்றுமோர் எளிய அடையாளம். இரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) அவர்கள் கரங்களைப் பற்றி எழுதிய சிறுகதை நினைவுக்கு வருகிறது.

அரசர் ஒருவர், தன் அவையில் பணிபுரியும் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்து, அழைப்பிதழை அனுப்பினார். விருந்துக்கு வருபவர்கள், தங்கள் அழைப்பிதழைக் கையோடு கொண்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பணியாளர்களில் ஒருவர், சிறப்பு விருந்தினராக, அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமரும் வாய்ப்பு பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

விருந்தில் அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமரும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் அழைப்பிதழைக் கொண்டு வந்திருந்தனர். விருந்து மண்டபத்தில் நுழைந்தபோது, அவர்களுக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. வாயில் காப்பவர்கள், பணியாளர்கள் கொண்டு வந்திருந்த அழைப்பிதழைப் பார்க்கவில்லை, மாறாக, அவர்கள் உள்ளங்கைகளைப் பார்த்தனர். ஒவ்வொரு நாளும் அரண்மனையைக் கூட்டி, கழுவி, சுத்தம் செய்யும் பணிப்பெண்ணின் கைகளைப் பார்த்த வீரர்கள், "அரசரின் சிறப்பு விருந்தினராக அமரும் வாய்ப்பு, உங்களுக்கே உள்ளது; அரசர் மீது நீங்கள் கொண்டுள்ள விசுவாசமும், அன்பும் உங்கள் உள்ளங்கைகளில் தெரிகிறது" என்று சொல்லி, அவரை அழைத்துச் சென்று, அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமர வைத்தனர். உள்ளங்கை உணர்த்தும் உண்மைகளை உணர, உள்ளம் திறந்திருக்கவேண்டும்!

காலியானக் கல்லறை, அங்கு தோன்றிய வானதூதர், எருசலேம் கோவிலில் இரண்டாகக் கிழிந்தத் திரை என்ற பிரமிப்பூட்டும் அடையாளங்களைவிட, ஆணிகளால் அறையப்பட்டக் கரங்களும், கால்களும், சீடர்களின் மனங்களில், உயிர்ப்பின் அடையாளங்களாய், ஆழப் பதியவேண்டும் என்று இயேசு விழைந்தார்.

வெகு வெகு எளிதான வாழ்வு அனுபவங்களின் வழியாக, உயிர்ப்பு என்ற பேருண்மையை இயேசு எடுத்துரைத்ததால், சீடர்களின் உள்ளங்களில் இந்த மறையுண்மை வெகு ஆழமாகப் பதிந்தது. ஆழப்பதிந்தது மட்டுமல்லாமல், இந்த மறையுண்மைக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு அவர்கள் வாழ்வு மாறியது. தான் உயிர்த்ததை, பிரம்மாண்டமான ஒரு சக்தியாக இறைமகன் இயேசு காட்டியிருந்தால், அது, ஒரு நொடிப்பொழுது வியப்பில், சீடர்களை, பரவசம் அடையச் செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் வாழ்வு மாறியிருக்குமா என்பது சந்தேகம்தான். வாழ்வை மாற்றும் ஒரு சக்தியாக இயேசு உயிர்ப்பைக் காட்டியதால், அதன் தாக்கம் சீடர்களின் வாழ்வு முழுவதும் தொடர்ந்தது.

மனித உறவுகளை அறுப்பதில், மிகவும் உறுதியான, முடிவான துண்டிப்பு சாவு என்று நாம் நம்புகிறோம். அந்தச் சாவும் உண்மையிலேயே ஒரு முடிவு அல்ல, கல்லறைக்குப் பின்னும் உறவுகள் தொடரும் என்பதைக் கூறும் மறையுண்மையே உயிர்ப்பு. கிறிஸ்தவ மறையின் ஆணிவேரான 'உயிர்ப்பு' என்ற பேருண்மையை, அறிவுக்கெட்டாத ஏட்டளவு உண்மையாக இயேசு சொல்லித் தரவில்லை, மாறாக, அந்த மறையுண்மையை உணவு, காயப்பட்ட கரங்கள், கால்கள் என்ற எளிதான மனித நிகழ்வுகளின் வழியே இயேசு அன்று தன் சீடர்களுக்குச் சொல்லித்தந்தார். இன்று நமக்கும் சொல்லித் தருகிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்வோம்.

கடவுள் மந்திர, மாயங்கள் செய்யும் மந்திரவாதி அல்ல. நம் வாழ்வில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யும் அன்பர் அவர்.

மாயங்கள் செய்து, மலைக்க வைப்பது, மந்திரவாதியின் கைவண்ணம் - வாழ்வில்

மாற்றங்கள் செய்து, நிலைக்க வைப்பது, இறைவனின் அருள்வண்ணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.