2018-04-10 15:40:00

ஞாயிறு மதக்கல்வியை கட்டாயமாக்கும் முயற்சி


ஏப்.10,2018. இலங்கையில் 6 முதல் 19 வயது வரையுள்ள அனைத்து மதங்களின் மாணவர்களுக்கு, ஞாயிறு மதக்கல்வி வகுப்பை கட்டாயமாக்கும் பரிந்துரை ஒன்று, காபினெட் குழுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றது என்று, யூக்கா செய்தி கூறுகின்றது.

அந்நாட்டின் புத்த மதத்தினர், கத்தோலிக்கர், இந்துக்கள் மற்றும் ஏனைய மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அவரவர் மதங்களின் கல்வி, ஞாயிறுகளில் நடத்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஞாயிறுகளில் கல்விப்பாடங்கள் சார்ந்த போதனைகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, 2017ம் ஆண்டில், இலங்கை கத்தோலிக்க கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், புத்தமதத் தலைவரும் இப்பரிந்துரையை அரசிடம் தெரிவித்தனர்.

கர்தினால் இரஞ்சித் அவர்கள், அரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில், ஞாயிறு நாள்களில் நடைபெறும், தனிப்பயிற்சி கல்வி (டுடோரியல்) வகுப்புகள், காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தடை செய்யப்பட வேண்டும், இதனால் மறைக்கல்வி வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை கத்தோலிக்க திருஅவையின் 12 மறைமாவட்டங்களில், 1,155 ஞாயிறு மறைக்கல்வி வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இவற்றில் ஏறத்தாழ 2 இலட்சத்து இரண்டாயிரம் மாணவர்களுக்கு, 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றனர்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.