2018-03-28 15:41:00

அரசு மாளிகையில் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு திருநாள்


மார்ச்,28,2018. லெபனான் அரசுத்தலைவர் Michel Aoun அவர்களின் மாளிகையில், மார்ச் 26, இத்திங்களன்று, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு திருநாள், முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது என்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

சிரியன் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை இரண்டாம் மார் இக்னேசியஸ் ஆஃப்ரெம் (Mor Ignatius Aphrem II), மற்றும், பல்வேறு கத்தோலிக்க, கிறிஸ்தவ, ஆயர்கள், இஸ்லாமிய மதத்தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில், அரசு மாளிகையில் இந்த விழா நிகழ்வுகள் நடைபெற்றன.

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து நிகழ்த்திய இந்த விழாவில், மரியாவைக் குறித்து, விவிலியத்திலும், குரான் நூலிலும் கூறப்பட்டுள்ள பகுதிகள் முதலில் வாசிக்கப்பட்டன என்றும், இறுதியில், அன்னை மரியா தங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டுமென்ற செபம், அனைவராலும் இணைந்து எழுப்பப்பட்டது என்றும், பீதேஸ் செய்தி கூறுகிறது.

கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் பொதுவாக விளங்கும் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு திருநாள், லெபனான் நாட்டில் ஒரு தேசிய விடுமுறையாக 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டுதான், முதல் முறையாக இந்த விழாவை இரு சமயத்தவரும் இணைந்து அரசு மாளிகையில் கொண்டாடியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.