2018-03-26 16:28:00

வத்திக்கானுக்கு உதவும் காவல் துறையினருக்கு பாராட்டு


மார்ச்,26,2018. உரோமைய ஆயர் ஆற்றும் மேய்ப்புப்பணிகளுக்குத் தேவையான பாதுகாப்பையும், ஒத்துழைப்பையும் வழங்கும் காவல் துறையினருக்கு நன்றி கூறுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

புனித பேதுரு பசிலிக்கா பேராலயம், பேதுரு பசிலிக்கா வளாகம், மற்றும் வத்திக்கான் நகரில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுவரும் காவல் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளையும், காவல் துறை பணியாளர்களையும் இத்திங்களன்று வத்திக்கான் கிளமெந்தீனா அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை, தன் நன்றியையும், பாராட்டுக்களையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.

வத்திக்கான் நகருக்கு, கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், ஏனைய சமயங்களைச் சார்ந்தவர்களும் வருகை தருகின்றனர் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இங்கு வரும் அனைவரும், பாதுகாப்பையும், அமைதியையும் உணரும் வகையில், காவல் துறையினர் பணிபுரிகின்றனர் என்று பாராட்டினார்.

வத்திக்கானுக்கும், திருப்பீடத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் காவல் துறையினரின் குடும்பங்களை மரியன்னை பாதுகாக்கவும், அவர்களின் குழந்தைகளை இறைவன் ஆசீர்வதிக்குமாறும் தான் செபிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.