2018-03-15 15:46:00

புனித பியோ திருத்தலம் - குழந்தைகளைச் சந்திக்கும் திருத்தந்தை


மார்ச்,15,2018. மார்ச் 17 இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பாத்ரே பியோ அவர்களின் திருத்தலத்திற்குச் செல்லும் வேளையில், அங்குள்ள "Casa Sollievo della Sofferenza" என்ற மருத்துவமனையில் உள்ள குழந்தைகளைச் சந்திக்கிறார்.

இந்த மருத்துவ மனையின், குழந்தைகள் பிரிவின் இயக்குனர் Lucia Miglionico அவர்கள் வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், தான் வத்திக்கானில் ஆயர்கள் மாமன்றத்திற்குச் சென்றிருந்த வேளையில், இக்குழந்தைகளைச் சந்திக்க திருத்தந்தைக்கு அழைப்பு விடுத்ததை நினைவு கூர்ந்தார்.

இக்குழந்தைகள் திருத்தந்தைக்கு எழுதிய கடிதங்களை அவரிடம் கொடுத்து, அவரை அழைத்ததையும், தான் குழந்தைகளைச் சந்திக்கும் நாள் விரைவில் வரும் என்று திருத்தந்தை கூறியதையும் Miglionico அவர்கள், தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.    

புனித பாத்ரே பியோ அவர்கள் 1956ம் ஆண்டு "Casa Sollievo della Sofferenza" மருத்துவ மனையை உருவாக்கினார் என்பதும், 2009ம் ஆண்டு, அப்போது திருத்தந்தையாக பணியாற்றிய 16ம் பெனடிக்ட் அவர்கள், இம்மருத்துவ மனையை பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.