2018-03-14 16:15:00

போதைப்பொருள் பயன்பாட்டை அழிக்க, உலகம் இணைந்து வரவேண்டும்


மார்ச்,14,2018. போதைப்பொருள் பயன்பாட்டை அழிக்கும் போரில், உலகம் முழுவதும் இணைந்து வரவேண்டும் என்பதை திருப்பீடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.அவை கூட்டமொன்றில் இச்செவ்வாயன்று உரையாற்றினார்.

வியன்னாவில் நடைபெறும் ஐ.நா.அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும், அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், போதைப்பொருள் பயன்பாட்டை அழிப்பதில், குடும்பங்கள், பள்ளிகள், அரசுகள், சமுதாயங்கள் அனைத்தும் இணைந்து வரவேண்டும் என்று கூறினார்.

போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பதற்கு, தண்டனைகள் பெரிதும் பயனளிக்காது என்பதை தன் உரையில் வலியுறுத்திக் கூறிய அருள்பணி Urbańczyk அவர்கள், இளையோருக்கு உரிய மதிப்பை வழங்கி, அவர்களின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவதே இப்பிரச்சனையிலிருந்து அவர்களை மீட்பதற்கு தலைசிறந்த வழி என்று எடுத்துரைத்தார்.

குடும்பங்களில் நிலவும் உறவுகளை பலப்படுத்துவதும், இளையோரின் நம்பிக்கையை வளர்ப்பதும் இந்த உலகளாவிய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பெரிதும் உதவும் என்று அருள்பணி Urbańczyk அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.