மார்ச்,08,2018. ஈராக்கில் பணியாற்றிவரும் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், 2018ம் ஆண்டுக்குரிய நொபெல் அமைதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.
கிர்குக் பேராயராகவும், கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையாகவும் பணியாற்றிவரும் சாக்கோ அவர்கள், ஈராக் நாட்டிலும், மத்தியக் கிழக்குப் பகுதியிலும் அமைதியைக் கொணர மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்காக, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் இன்னும் ஏனைய மதத்தினர் அனைவரும் இணைந்து, இந்த விருதுக்கு அவரைப் பரிந்துரை செய்துள்ளனர்.
தான் இந்த விருதைப் பெறுவது முக்கியமல்ல, ஆனால், இந்த பரிந்துரையின் வழியே, ஈராக் நாட்டில் நிகழும் கொடுமைகள் உலக சமுதாயத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்படுவது முக்கியம் என்று, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
முதுபெரும் தந்தை சாக்கோ அவர்களை இந்த விருதுக்கு பரிந்துரைக்க, பிரான்ஸ் பாராளுமன்றத்தின் 125 உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்று ஆசிய செய்தி மேலும் கூறியுள்ளது.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |