2018-03-03 10:27:00

ஹோலிப் பண்டிகையில் கிறிஸ்தவர்கள் இணைய போபால் பேராயர் லியோ


மார்ச்,02,2018. வண்ணங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படும் ஹோலிப் பண்டிகையில், அனைத்து மதத்தினரும் கலந்துகொள்வது, பல்வேறு மதத்தவருக்கு இடையே பாலம் அமைக்க உதவியாக இருக்கும் என்று, இந்திய கத்தோலிக்க பேராயர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகை குறித்து யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்துள்ள, மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் பேராயர், லியோ கொர்னேலியோ அவர்கள், இவ்விழா, அனைத்து இந்தியருக்கும், மகிழ்வு, ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் விழாவாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில், ஒற்றுமையும் நல்லிணக்கமும் காக்கப்பட வேண்டுமென்றும், இதற்கு கிறிஸ்தவ சமுதாயம் தன் முழுஆதரவை வழங்குகின்றது என்றும் கூறியுள்ள பேராயர், லியோ கொர்னேலியோ அவர்கள், இப்பண்டிகையில் கிறிஸ்தவர்கள் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில், 2017ம் ஆண்டில், கிறிஸ்தவர்க்கெதிராக 736 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன, இவை 2016ம் ஆண்டைவிட, இருமடங்கு அதிகம் என்று யூக்கா செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.