2018-02-10 14:38:00

இமயமாகும் இளமை : லூர்துநகர் திருத்தலத்தில் இளையோர் அணி


14 வயது நிறைந்த பெர்னதெத் சுபிரூ (Bernadette Soubirous) என்ற இளம்பெண்ணுக்கு, 1858ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகரில், அன்னை மரியா முதல் முறையாகத் தோன்றினார். அந்நிகழ்வின் 160ம் ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறோம். கடந்த 160 ஆண்டுகளாக, தன்னை நாடிவந்துள்ள பக்தர்களுக்கு, மனநலத்தையும், உடல் நலத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத்தருகிறார் லூர்துநகர் அன்னை மரியா.

இத்திருத்தலத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு, குறிப்பாக, இங்கு செல்லும் நோயுற்றோருக்கு, இளையோர் அணிகள், நாள் தவறாமல் உதவிகள் செய்வதைக் காணும்போது, இரு விடயங்கள் தெளிவாகின்றன. இளையோர் நடுவே, மத உணர்வுகள் இன்னும் உயிரோட்டமுடன் இருப்பதும், துன்புறுவோரைக் கண்டதும் அவர்களுள் ஊற்றெடுக்கும் பரிவும், லூர்து நகர் திருத்தலத்தில் வெளிச்சமாகின்றன. உள்நோக்கம் ஏதுமின்றி, பலன் எதையும் எதிர்பார்க்காமல், ஆர்வமுடன் பணியாற்றும் இவ்விளையோரை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுவோம். இறை நம்பிக்கையும், பிறரன்பும் நிறைந்த இளையோர், உலகெங்கும் அணி திரளவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.