2018-02-06 16:09:00

2018ம் ஆண்டு தவக்காலத்திற்கு திருத்தந்தையின் செய்தி


பிப்.06,2018. "நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்" (மத்தேயு 24:12) என்று நற்செய்தியாளர் மத்தேயு பதிவு செய்துள்ள இயேசுவின் சொற்களை மையமாக வைத்து, இவ்வாண்டுக்குரிய தவக்காலச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இம்மாதம் 14ம் தேதி, சிறப்பிக்கப்படும் திருநீற்றுப் புதனன்று துவங்கும் தவக்காலத்திற்கென, இச்செவ்வாயன்று செய்தி வெளியிட்ட திருத்தந்தை, நம் மனமாற்றத்தின் அருளடையாளச் சின்னமாக, தவக்காலம் வழங்கப்படுகிறது என்று இச்செய்தியைத் துவக்கியுள்ளார்.

தன் இறுதி நேரம் நெருங்கிவருவதை உணர்ந்த இயேசு, எருசலேமுக்கருகே ஒலிவ மலை மீது அமர்ந்து, தன் சீடர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வேளையில், பல்வேறு துன்ப இடர்கள் சூழும் காலத்தில், பல போலி இறைவாக்கினர் தோன்றி, பலரை நெறிதவறி அலையச் செய்வர் என்று கூறிய வார்த்தைகளை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமக்கள் பலர், தற்காலிக இன்பங்களில் தங்களையே இழந்து, அடிமையாகி, தனிமையில் சிறைப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துரைத்துள்ளார்.

போலி இறைவாக்கினர்கள், துன்பங்களுக்கு எளிதான தீர்வுகளை முன்வைத்து, இளையோரை போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதுடன், பயன்படுத்தி, தூக்கியெறியும் உறவுகளையும், நேர்மையற்ற இலாபத்தை ஊக்குவிப்பதையும் தன் தவக்காலச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணத்தின் மீது வளரும் மோகம், பிறரன்பை அழித்துவிடுகிறது என்பதையும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இத்தவக்காலத்தில், செபம், பிறரன்பு செயல்கள், மற்றும் உண்ணா நோன்பு ஆகியவற்றின் வழியே, உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்று இச்செய்தியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.