2018-02-05 15:34:00

தாழ்ச்சியுடன் இறைவனைத் தேடுவோர், இரக்கப் பார்வையை உணர்வர்


பிப்.05,2018. 'தங்கள் துன்ப நிலைகள் குறித்து தெரிந்தவர்களாக, தாழ்ச்சியில் தங்கள் பார்வையை தாழ்த்தி நடக்கும் மனிதர்கள், இறைவனின் இரக்கப் பார்வை தங்கள் மீது படிவதை உணர்வர்' என்று, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், 'தன்னைத் தேடுவோர், தன்னை கண்டுகொள்ள அனுமதிக்கிறார் இயேசு. ஆனால், அவரைத் தேட வேண்டுமெனில், நாம் எழுந்து வெளி உலகில் செல்ல வேண்டியிருக்கும்' என்பதாக, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி இருந்தது.

மேலும், இத்திங்களன்று, கத்தோலிக்க கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஈரான், ஈராக், லெபனான், சிரியா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஆஸ்திரேலியா, கானடா, எகிப்து மற்றும் துருக்கியில் பணிபுரியும் இந்த ஆயர்கள், ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி, கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்களுடன் திருத்தந்தையை சந்தித்து உரையாடினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.