2018-02-01 15:06:00

சிபிஆர் அவசர சிகிச்சையை அளித்து உயிரைக் காத்த காவலர்


பிப்.01,2018. ஹைதராபாத்தில் சாலையில் நடந்து சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நபருக்கு காவலர் ஒருவர் சிபிஆர் எனப்படும் அவசர சிகிச்சையை அளித்து உயிரைக் காப்பாற்றினார்.

சிபிஆர் என்பது, மார்புக்கு அழுத்தங்களைக் கொடுத்து சுவாசத்தை மீட்டெடுக்கும் முறையாகும். இந்த முறையைப் பின்பற்றி, காவலர், அந்த நபரின் உயிரைக் காப்பாற்றிய நிகழ்வு, சனவரி 31, புதன்கிழமை நடந்தது.

ஹைதராபாத் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கே.சந்தன் மற்றும் இனாயாதுல்லா கான். ஆகிய இருவரும் பகதர்புரா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள். இவர்கள் புதன்கிழமையன்று பூரனபுல் தர்வாஜா பகுதியில் பணியில் இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த நபருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, வலி தாங்காமல் சாலையில் சரிந்து விழவே, அவரைச் சுற்றி மக்கள் குவிந்தனர்.

இதைக் கண்ட காவலர்கள், கே.சந்தன் மற்றும் இனயத்துல்லா கான் இருவரும், கூட்டத்தை விலக்கிவிட்டு அந்த நபருக்கு உதவினர். இந்த அவசர உதவியால் அவர் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டார். பின்னர், அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஹைதராபாத்தில் ஊர்க்காவல் படையினருக்கு சிபிஆர் எனப்படும் அவசர சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.