2018-01-29 17:18:00

அன்னையின் இருப்பால் நாம் ஒரே குடும்பமாகிறோம்


சன.29,2018. மரியன்னையின் இருப்பால், மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தை ஒரு குடும்ப இல்லமாக நோக்கும் நாம், இங்கு ஆறுதலையும், பாதுகாப்பையும், அடைக்கலத்தையும் பெறுகிறோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'சாலுஸ் போப்புலி ரொமானி' என்ற பெயர் கொண்ட அன்னை மரியாவின் திரு உருவம், புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் உரோம் நகரின் மேரி மேஜர் பசிலிக்காவில் நிறுவப்பட்ட சிறப்பு நிகழ்வையொட்டி, இஞ்ஞாயிறன்று காலை அப்பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியா நம்மை பாதுகாத்து உறுதிப்படுத்துகிறார் என நம் முன்னோர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர், ஏனெனில், அன்னை மரியா இருக்கும் இடத்தில் தீயோன் நுழைவதில்லை என்றார்.

எலிசபெத்தின் தேவையறிந்து உதவச் சென்ற அன்னை மரியாவை நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் வரவேற்று, நம் வாழ்வில் குடியமர்த்துவோம் என்ற அழைப்பையும் தன் மறையுரை வழியே முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்திருப்பலிக்குப்பின், தூய பேதுரு பேராலயம் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராலய வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு, இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்த மூவேளை செபவுரை வழங்கினார்.

இயேசு கிறிஸ்து, தன் வார்த்தைகளில் மட்டுமல்ல, செயலிலும் வல்லமை கொண்டவராக இருந்து, வார்த்தை வழியாகவும் செயல் வழியாகவும் இறைத்திட்டத்தை வெளிப்படுத்தினார் என்றார்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், ஆப்கானிஸ்தான் மோதல்களால் துன்புறும் மக்களுக்காகவும், ஹான்சன் நோயாளிகளுக்காகவும் செபிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.