2018-01-25 15:29:00

திருத்தந்தை, மத்திய ஆப்ரிக்கக் குடியரசுத்தலைவர் சந்திப்பு


சன.25,2018. மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர், Faustin Archange Touadera அவர்களும், அவருடன் வந்திருந்த அரசுப் பிரதிநிதிகளும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர்.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்தும், குறிப்பாக, 2016ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி, திருப்பீடத்திற்கும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கும் இடையே உறுதியான ஓர் ஒப்பந்தம் பாங்கியில் உருவானது குறித்தும் பேசப்பட்டதென்று, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்தது.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் நிலையான அரசியல் சூழலை உருவாக்க, அரசும், தலத்திருஅவையும் மேற்கொண்டு வரும் பல முயற்சிகள், மற்றும், நாட்டின் பல்வேறு குழுக்களுக்கிடையே ஒப்புரவை உருவாக்க மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் ஆகியவை குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது.

அரசுத்தலைவர் Touadera அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர், ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

மேலும், சனவரி 25, இவ்வியாழன் மாலை 5.30 மணிக்கு, உரோம் நகரின் புறச்சுவருக்கருகே அமைந்துள்ள புனித பவுல் பசிலிக்காவில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவாக நடைபெறும் மாலை வழிபாட்டை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.