2018-01-23 15:35:00

தாக்கப்பட்டவர்களை மட்டும் கைது செய்துள்ள காவல்துறை


சன.23,2018. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 300 மத தீவிரவாதிகளைக் கொண்ட கும்பல் ஒன்று, பெந்தக்கோஸ்தே கோவில் ஒன்றையும், கிறிஸ்தவர்களின் பல கடைகளையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறிய ஒரு பெண்ணை, அவரின் கணவர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தை எழுப்பி, அந்த பெண் கட்டாயமாக மதம்மாற வைக்கப்பட்டார் எனவும் தற்போது கூறி, கிறிஸ்தவர்களைத் தாக்கியுள்ளது இந்து மத கும்பல் ஒன்று. காஷ்மீர் பகுதியில், கிறிஸ்தவர்கள் எப்போதும் பட்டறைக் கல்லுக்கும் சுத்தியலுக்கும் இடையே அகப்பட்டவர்களாக இருப்பதாகக் கூறும் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவையின் தலைவர் Sajan K George அவர்கள், பாரதீய ஜனதா கட்சியும், இஸ்லாமிய கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தும் மாநிலத்தில், மிகச்சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்கள், அதிலும் குறிப்பாக பெந்தக்கோஸ்தே கிறிஸ்தவ சபையினர், மிகப்பெரும் நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றனர் என்றார்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ரிங்கு குமார் எனபவரை திருமணம் புரிந்து, தானும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய சீமா தேவி என்பவர், இம்மாதம் 15ம் தேதி, நோயின் காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார் எனவும், அவர் கணவரே சீமாதேவியைக் கொலை செய்துள்ளார் எனவும் பொய்க் குற்றம் சாட்டி, பஜ்ரங்தள் இளையோர் தீவிரவாத கும்பல் ஒன்று, Nowshera கிராமத்தில் உள்ள கோவிலினுள் புகுந்து, அங்கு வழிபாட்டில் கலந்துகொண்டோரைத் தாக்கி, கோவிலை சேதப்படுத்தியுள்ளதுடன், அனைவரும் இந்து மதத்திற்குத் திரும்ப வேண்டும் என அச்சுறுத்தியுள்ளது.

சீமாதேவியின் கணவர் ரிங்கு குமார் உட்பட 7 கிறிஸ்தவர்களைக் கைது செய்துள்ள காவல்துறை, கோவிலையும், கிறிஸ்தவர்களின் கடைகளையும் தாக்கியுள்ள தீவிரவாதிகளைச் சுதந்திரமாக அலையவிட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.