2018-01-23 14:42:00

செபம், முழு கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு இன்றியமையாதது


சன.23,2018. “நம் பாதையைத் தூய்மைப்படுத்தி, உறுதிப்படுத்தி, சுடர்விடச் செய்கின்ற செபம், முழு கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய நம் பயணத்திற்கு, எரிபொருள் போன்றது ” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

சனவரி 18ம் தேதி முதல், 25ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், முழு கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு, செபம் இன்றியமையாதது என்று செய்தி வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நாளான சனவரி 25, வருகிற வியாழன் மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித பவுல் பசிலிக்கா சென்று, கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளுடன் மாலை வழிபாட்டை தலைமையேற்று நடத்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும், புனித பவுல் மனந்திரும்பிய விழாவான சனவரி 25ம் தேதியன்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் நிறைவடைகின்றது.

‘ஆண்டவரே உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது (வி.ப.15,6)’ என்ற தலைப்பில், 51வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், சனவரி 18, கடந்த வியாழன் முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.