2018-01-10 16:20:00

அனைவருக்கும் நன்மைகள் நிறையட்டும் - லாகூர் பேராயர்


சன.10,2018. 2018ம் ஆண்டு, பாகிஸ்தான் நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும், அமைதி, சகிப்புத்தன்மை, ஒருங்கிணைப்பு ஆகிய அனைத்து நன்மைகளும் நிறைந்த ஆண்டாக இருப்பதாக என்று லாகூர் பேராயர், செபாஸ்டின் பிரான்சிஸ் ஷா அவர்கள் பல்சமயக் கூட்டமொன்றில் கூறினார்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ உறவுகளை உறுதிப்படுத்தும் எண்ணத்துடன், லாகூரில் நடைபெற்ற பல்சமயக் கூட்டமொன்றில் உரையாற்றிய பேராயர் ஷா அவர்கள், பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்கும், நாட்டுப்பற்று மிக முக்கியமான ஓர் அடையாளம் என்பதை வலியுறுத்திப் பேசினார்.

தீவிரவாதத் தாக்குதல்களால் உலகின் பல நாடுகளில் உயிர் பலிகள் நிகழ்ந்து வருகின்றன என்று தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் ஷா அவர்கள், வருங்காலத் தலைமுறையினரை அமைதி கலாச்சாரத்தில் வளர்ப்பது இன்றையத் தலைமுறையினரின் மிக முக்கியக் கடமை என்று எடுத்துரைத்தார்.

தனி மனிதரிலும், குடும்பங்களிலும் நிலவும் அமைதியே, நாட்டின் அமைதியை உறுதி செய்யும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக அமைதி நாளுக்கு வழங்கியச் செய்தியில் கூறியதை, பேராயர் ஷா அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.