2018-01-09 14:28:00

விவிலியத்தேடல் : புதுமைகள் – அறிமுகம் / பகுதி 2


சனவரி 7, கடந்த ஞாயிறு, திருக்காட்சிப் பெருவிழாவைச் சிறப்பித்தோம். இவ்விழாவை, மூன்று அரசர்கள் அல்லது, மூன்று ஞானிகள் திருவிழா என்றும் அழைக்கிறோம். குழந்தை இயேசு பிறந்ததைக் காண்பதற்கு, இரு குழுக்கள் சிறப்பான அழைப்பைப் பெற்றன. இவற்றில், முதலில் அழைக்கப்பட்ட இடையர் குழுவினருக்கு நாம் விழா எடுப்பதில்லை. ஆனால், அழைக்கப்பட்ட ஞானிகளுக்கு விழா எடுக்கிறோம். ஏன் இந்த வேறுபாடு என்பதைச் சிந்திப்பது, புதுமைகள் குறித்த நம் தேடலுக்கு உதவியாக இருக்கும்.

இடையர்களுக்கு, வானதூதர்கள் நேரடியாகத் தோன்றி, கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அறிவித்தனர். நள்ளிரவில், வானத்தில், இயற்கைச் சூழலிலிருந்து வெகுவாக வேறுபட்ட ஒரு நிகழ்வை நேரடியாக அனுபவித்ததால், இடையர்களுக்கு இயேசுவின் பிறப்புச் செய்தியை புதுமையென்று ஏற்பதற்கு, எவ்விதத் தயக்கமும் தோன்றியிருக்காது.

இதற்கு மாறாக, கீழ்த்திசை ஞானிகளுக்கோ, வானில் தோன்றிய ஒரு விண்மீன் வழியே, கிறிஸ்து பிறப்பு அறிவிக்கப்பட்டது. பல்லாயிரம் விண்மீன்கள் நடுவே தோன்றிய அந்த விண்மீன், ஞானிகளுக்கு எந்த செய்தியும் சொல்லவில்லை. அந்த விண்மீன் சொல்வது, நல்லதொரு செய்தியாகத்தான் இருக்கவேண்டும் என்று நம்பிய ஞானிகள், அதைத் தொடர்வதற்குத் தீர்மானித்தனர். இயேசுவின் பிறப்பு என்ற புதுமையைக் கண்டனர்.

இவ்வுலகில், இன்றும், அற்புதமானச் செய்திகள், ஒவ்வொரு நாளும் வந்தவண்ணம் உள்ளன. இச்செய்திகளில் சில, இடையர்கள் அனுபவித்ததுபோல, சராசரி, இயல்பு வாழ்விலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. அவ்வேளைகளில், அவற்றை, அற்புதங்கள், புதுமைகள் என்று எளிதில் ஏற்றுக்கொள்கிறோம். இவற்றிற்கு மாறாக, இன்னும் பல புதுமைகள், எளிதான அடையாளங்கள் வழியே நம்மைச் சுற்றி நிகழ்கின்றன. அவற்றை நாம் சரிவரப் புரிந்துகொண்டால், நமது வாழ்வு, அற்புதங்களால், புதுமைகளால் நிறைந்துவிடும். இதையே, கீழ்த்திசை ஞானிகள், நமக்குச் சொல்லித் தருகின்றனர். இத்தகைய மனநிலையுடன், புதுமைகளில், நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.

இயேசு ஆற்றியதாக, நான்கு நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளின் எண்ணிக்கை 35 என்பது, பொதுவான கருத்து. இவற்றோடு, கன்னியிடமிருந்து பிறந்தது, உயிர்த்தெழுந்தது, விண்ணகம் சென்றது என்ற புதுமைகளை இணைத்து, இயேசு ஆற்றியப் புதுமைகள் 40 என்று ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளனர். எந்த ஒரு நற்செய்தியாளரும், அனைத்துப் புதுமைகளையும் ஒரே நூலில் தொகுத்துத் தரவில்லை.

ஒரு சில புதுமைகள், ஒரு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளது. எடுத்துக்காட்டாக, இயேசு கானா திருமணத்தில் தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றியப் புதுமை, யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளது (யோவான் 2:1-11). அதேபோல், நயீன் நகர் கைம்பெண்ணின் மகனை இயேசு உயிர்ப்பிக்கும் புதுமை, லூக்கா நற்செய்தியில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது (லூக்கா 7:11-17). இதற்கு மாறாக, இயேசு, ஐயாயிரம் பேருக்கு உணவளித்தப் புதுமை, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது (மத். 14:13-21; மாற். 6:30-44; லூக். 9:10-19; யோவா. 6:1-14).

விவிலிய விரிவுரையாளர்கள், இயேசு ஆற்றிய புதுமைகளை 4 வகையாகப் பிரித்துள்ளனர். பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளில், பாதிக்கும் மேற்பட்டவை, நோயுற்ற மக்களுக்கு நலமளிக்கும் புதுமைகளாக அமைந்துள்ளன. உயிரற்றோருக்கு உயிரளிக்கும் புதுமைகள், மூன்று இடங்களில் கூறப்பட்டுள்ளன. இயற்கையின் மீது இயேசு தன் சக்தியைப் பயன்படுத்தும் புதுமைகளாக, கடல் மீது நடத்தல், கடலை அமைதிப்படுத்துதல் போன்ற சில புதுமைகள் பதிவாகியுள்ளன.

நான்கு நற்செய்திகளிலும், புதுமைகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று சொற்கள், புதுமைகளின் ஒரு சில அம்சங்களை உணர்ந்துகொள்ள உதவியாக இருக்கும்.

‘துனாமிஸ்’ (Dunamis) என்ற கிரேக்கச் சொல்லுக்கு, 'வல்லமை' என்று பொருள். இறைவனின் வல்லமையால் நிறையப்பெற்ற இயேசு, இயற்கையை மீறிய வல்லமையோடு, புதுமைகள் ஆற்றினார். இரத்தப் போக்கினால் வருந்தியப் பெண், இயேசுவின் மேலுடையைத் தொடும் நிகழ்வில், நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு கூறியுள்ளார்:

மாற்கு 5: 29-30

"(இயேசுவின் மேலுடையைத்) தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே, இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து, மக்கள் கூட்டத்தைத் திரும்பிப்பார்த்து, 'என் மேலுடையைத் தொட்டவர் யார்?' என்று கேட்டார்."

புதுமைகளைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு சொல், ‘தேரெசா’ (Teresa). இந்தச் சொல், புதுமைகள் நிகழும்போது மக்களிடையே ஏற்பட்ட வியப்பு, திகைப்பு, மலைப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

புயல்காற்று சூழ்ந்த படகில் உறங்கிக்கொண்டிருந்த இயேசு, விழித்தெழுந்து, காற்றையும், அலைகளையும் அடக்கியபோது, மக்களெல்லாரும், "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ?" என்று வியந்தனர். (மத். 8:27)

தீய ஆவி பிடித்தவரை இயேசு குணமாக்கியபோது, சூழ இருந்த மக்கள் "அனைவரும் திகைப்புற்று, 'இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்." (மாற்கு 1:27)

பேய்பிடித்த சிறுவனை இயேசு குணப்படுத்தி, அவனது தந்தையிடம் ஒப்படைத்தபோது, "எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள். இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்." (லூக்கா 9:43)

வியப்பு, திகைப்பு, மலைப்பு என்ற மூவகை உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல், ‘தேரெசா’.

இயேசுவின் புதுமைகளைப்பற்றி பேசும்போது, நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் மூன்றாவது சொல், 'செமெயியோன்' (Semeion). கிரேக்க மொழியில் இந்தச் சொல்லுக்கு, 'அடையாளம்' என்று பொருள். இந்தச் சொல்லை, நற்செய்தியாளர் யோவான், அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். கானா திருமணத்தில், இயேசு, தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றியதும், யோவான் கூறும் விளக்கம் இவ்வாறு அமைந்துள்ளது:

இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். (யோவான் 2:11)

அரச அலுவலர் மகனை இயேசு குணமாக்கும் புதுமையைத் தொடர்ந்து, "இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே" (யோவான் 4:54) என்ற விளக்கத்துடன், இரண்டாம் புதுமையை, யோவான் நிறைவு செய்துள்ளார்.

ஐயாயிரம் மக்களுக்கு இயேசு உணவளித்த புதுமைக்குப்பின், "இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள்" (யோவான் 6:14) என்ற சொற்களை, யோவான் பதிவு செய்துள்ளார்.

இயேசு ஆற்றிய புதுமைகளைக் கண்டவர்கள், வியப்பு, மலைப்பு, திகைப்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு, இன்னும் சில அழகான, ஆழமான உணர்வுகளையும் வெளிப்படுத்தினர் என்பதை, நாம் நற்செய்தியில் காண்கிறோம்.

எடுத்துக்காட்டாக, இரவு முழுவதும் மீன் பிடிப்பு இன்றி சோர்ந்திருந்த சீமோன் பேதுருவிடம் மீண்டும் மீன் பிடிக்கும்படி இயேசு பணித்தபோது, அதற்கு செவிமடுத்து, பேதுரு வலையை வீசவே, திரளான மீன்கள் வலையில் விழுந்தன. "இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, 'ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்' என்றார்" (லூக்கா 5:8) என்று நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ளார்.

பத்து தொழுநோயாளரை இயேசு குணப்படுத்தும் புதுமையில், அவர்களை குருக்களிடம் காட்டும்படி இயேசு அவர்களை அனுப்பி வைக்கிறார். அவ்வேளையில் நிகழ்ந்ததை, லூக்கா நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

லூக்கா 17: 14ஆ-16

அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.

புதுமைகளைக் கண்டு, தன்னுடைய தகுதியின்மையை உணர்தல், அல்லது நன்றியால் நிறைதல் என்ற புனிதமான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மாற்றாக, ஏரோது மன்னன், இயேசுவின் புதுமைகளை, கண்கட்டி வித்தையைப்போல் வேடிக்கைப் பார்க்கும் ஆவலில் இருந்தான் என்று நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம். தன் முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட இயேசு, கலிலேயாவைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த ஆளுனர் பிலாத்து, அவரை, ஏரோதிடம் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து நிகழ்ந்தனவற்றை, லூக்கா நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்.

லூக்கா 23: 8-9

இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.

இயேசுவின் புதுமைகளை, ‘மேஜிக்’ வித்தைகளாகக் கருதாமல், நன்றி உணர்வுடன் அவற்றை அணுகிச் செல்வோம், இனி வரும் தேடல்களில்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.