2018-01-09 12:52:00

குடும்பத்தின் அன்பு மொழிகளால் வளர்க்கப்படும் விசுவாசம்


சன.08,2018. தாய், தந்தை, தாத்தா, பாட்டி என்ற குடும்பத்தின் மொழியிலேயே விசுவாசம், ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு வழங்கப்படுகிறது என இஞ்ஞாயிறு காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

16 ஆண் குழந்தைகள், 18 பெண் குழந்தைகள் என 34 குழந்தைகளுக்கு, இஞ்ஞாயிறு காலை, இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவன்று, வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் திருமுழுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியானவரால் விசுவாசம் வழங்கப்படும் நிகழ்வு, திருமுழுக்கின்போது இடம்பெறுகின்றபோதிலும், அதன் தொடர்ச்ச்சி, குடும்பத்தின் அன்பு மொழிகளில் இடம்பெறுகின்றது என்று கூறினார்.

பெற்றோராலும், தாத்தா பாட்டிகளாலும் ஊட்டப்படும் இந்த விசுவாசம், மறைக்கல்வி ஆசிரியர்களால் பிற்காலத்தில் விளக்கமளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது எனவும் கூறினார் திருத்தந்தை.

குழந்தைக‌ளின் மொழி இயேசுவுக்கு பிடித்தமான ஒன்று என்பதால், அவர்களைப் போலவே நாமும் பேசப் பழகுவதோடு, இயேசுவுடன் அம்மொழியிலேயே உரையாடுவோம் எனவும் கேட்டுக் கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

குழந்தைகளின் மொழியைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு அன்பின் மொழியில் பதில் வழங்க வேண்டியதன் கடமை குறித்தும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.