சன.06,2018. அமேசான் பருவமழைக்காடுகள், எந்தவிதச் சட்டம், ஒழுங்குமுறையின்றி, பணமும் அதிகாரமும் கொண்டவர்களின் ஆணவத்தின் நிலமாக மாறி வருகின்றன என்று, பிரேசில் நாட்டு கர்தினால் Claudio Hummes அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
REPAM எனப்படும், அமேசான் பகுதியின் பாதுகாப்பு குறித்த திருஅவை அமைப்பின் தலைவர் கர்தினால் Hummes, இந்த அமைப்பின் பிரேசில் கிளையின் தலைவர் ஆயர் Erwin Krautler ஆகிய இருவரும் இணைந்து, கிறிஸ்மஸ் காலத்தையொட்டி, பொதுவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசான் பகுதியில், அரசியல்துறை, நீதித்துறை, சட்டத்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் ஆவிகள் போன்று உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
கடவுளின் இலவசக் கொடையான அமேசான், வன்முறை மிகுந்த மற்றும் வாழ்வை அழிக்கும் நிலமாக மாறி வருகின்றது என்று குறிப்பிட்டுள்ள அத்தலைவர்கள், அமேசான் பகுதியில் இடம்பெறும் கொலைகள், மக்கள் வெளியேற்றப்படல் மற்றும், வீடுகளும் நிலமும் சூறையாடப்படல் ஆகியவை பற்றி விவரித்துள்ளனர்.
அமேசானின் ஒவ்வொரு மூலையிலும் மோதல்கள் அதிகமாகியுள்ளன என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடப்படுகின்றனர் என்றும் கூறியுள்ள அத்தலைவர்கள், கிறிஸ்மஸ் காலம் ஏழைகளுக்கு வாழ்வு கொடுப்பதாய் அமைய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |