2018-01-04 15:17:00

வெனெசுவேலா மக்களின் வறுமையை அகற்றுமாறு அரசுக்கு அழைப்பு


சன.04,2018. தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில், 82 விழுக்காட்டு மக்கள் வறுமையிலும், 52 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டிற்குக்கீழும் வாழ்கின்றவேளை, நாட்டின் வறுமையை அகற்றுவதற்கு, அரசு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, அந்நாட்டு கர்தினால் Jorge Liberato Urosa Savino அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

வெனெசுவேலாவின் "Unión Radio" வானொலிக்குப் பேட்டியளித்த, தலைநகர் கரகாஸ் பேராயர், கர்தினால் Urosa Savino அவர்கள், 2016ம் ஆண்டில், மருந்துகள் பற்றாக்குறையால், 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறார் இறந்துள்ளனர் என்றும், தாய்மைப்பேறு இறப்புகள், ஏறத்தாழ எழுபது விழுக்காடு அதிகரித்துள்ளன என்றும் கூறியுள்ளார்.

வாழ்வின் அடிப்படைத் தேவைகளான உணவும், மருந்துகளுமின்றி வாடும் மக்களின், குறிப்பாக சிறார் மற்றும் இளையோரின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார், கர்தினால் Urosa Savino. 

தொமினிக்கன் குடியரசில், வெனெசுவேலா அரசுக்கும், எதிர்க்கட்சியனருக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில், ஒளிவுமறைவற்ற தேர்தல்களை நடத்துவதற்கு அரசு உறுதியளித்திருப்பது காப்பாற்றப்பட வேண்டுமென்றும், தன் வானொலி நேர்காணலில் கர்தினால் Urosa Savino அவர்கள், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.