2018-01-02 14:41:00

கடவுளின் கனிவை குடிலின் எளிமையில் தியானிக்கின்றோம்


சன.02,2018. “குழந்தை இயேசுவில் வெளிப்படுத்தப்படும் கடவுளின் கனிவை, கிறிஸ்மஸ் குடிலின் எளிமையில் நாம் சந்திக்கின்றோம் மற்றும் தியானிக்கின்றோம்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

ஏறத்தாழ ஒவ்வொரு நாளும், ஒன்பது மொழிகளில் டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்தந்த திருவழிபாட்டுக் காலம் அல்லது அந்தந்த உலக நாளின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி, செய்திகளை வெளியிட்டு வருகிறார். 

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப் பொறுப்பேற்ற நான்காம் ஆண்டு நிறைவு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2017ம் ஆண்டில் உலகில் மேற்கொண்ட திருத்தூதுப்பயணங்களின் நினைவு உட்பட, பல முக்கிய நிகழ்வுகளின் தபால்தலைகளை, வத்திக்கான் அஞ்சல் துறை, 2018ம் ஆண்டில் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையர் முத்திப்பேறு பெற்ற ஆறாம் பவுல், முதலாம் ஜான் பால் ஆகியோர் விண்ணகம் அடைந்ததன் நாற்பதாம் ஆண்டு, புனித பாத்ரே பியோ அவர்கள் இறைபதம் எய்தியதன் ஐம்பதாம் ஆண்டு, “Centesimus Annus pro Pontifice” பாப்பிறை மைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நினைவு, உலக ஆயர்கள் மாமன்றத்தின் 15ம் ஆண்டு, பாப்பிறை இறையியல் கழகத்தின் முன்னூறாம் ஆண்டு, உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை வெளியிடப்பட்டதன் எழுபதாம் ஆண்டு உட்பட பல முக்கிய நிகழ்வுகளின் நினைவாக, 2018ம் ஆண்டில், தபால்தலைகளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது, வத்திக்கான் அஞ்சல் துறை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.