2018-01-01 15:50:00

இமயமாகும் இளமை – ஓர் அறிமுகம்


2018ம் ஆண்டு புலர்ந்துள்ளது. இவ்வாண்டு, அனைவருக்கும், வளமான, நலமான, அமைதியும் அன்பும் நிறைந்த ஆண்டாக விளங்கட்டும்.

இவ்வாண்டு, கத்தோலிக்கத் திருஅவையின் கவனம், இளையோர் மீது அதிகம் பதியும். இளையோரை மையப்படுத்தி, இவ்வாண்டு அக்டோபர் மாதம், வத்திக்கானில் உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறுகிறது. இந்த மாமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மையக்கருத்து: "இளையோர், நம்பிக்கையும், அழைத்தலைத் தேர்ந்து தெளிதலும்".

நம்பிக்கை, அழைத்தல், தேர்ந்து தெளிதல் என்ற கருத்துக்களுடன், இளையோருக்குத் தேவையானவை கனவுகாணுதல், பகிர்தல்.

தான் செல்லும் நாடுகளில் எல்லாம், இளையோரை, தவறாமல் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாட்டிலும், இளையோருக்கு விடுக்கும் ஒரு முக்கிய விண்ணப்பம்: கனவு காணத் தயங்காதீர்கள் என்பதே.

பகிரந்து வாழ விரும்பாத இளையோர், அருங்காட்சியகத்தில் வாழ வேண்டியிருக்கும் என்று, திருத்தந்தை, அண்மையில் இளையோருடன் செயற்கைக்கோள் வழியே மேற்கொண்ட ஓர் உரையாடலில் எச்சரிக்கை விடுத்தார். (Scholas Occurrentes - June 9, 2017)

இளையோரின் கனவுகளைக் கலைக்கும் வண்ணம் இவ்வுலகம் காட்டும் வழிகளில் பல்லாயிரம் இளையோர் பயணிக்கும் வேளையில், அந்தக் கூட்டத்திலிருந்து விலகி நிற்கவும், தேவைப்பட்டால், எதிர்நீச்சல் போடவும், இளையோர் தயாராக இருக்கவேண்டும் என்ற அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோரிடம் விடுத்து வருகிறார்.

நம்பிக்கை, அழைத்தல், தேர்ந்து தெளிதல், கனவு காணுதல், பகிர்ந்து வாழுதல் என்ற பல அம்சங்களில், இளையோர் இமயம்போல் உயர்ந்து நிற்கவேண்டும் என்ற கருத்துடன், இவ்வாண்டு, நம் வானொலி நிகழ்வுகளின் முதல் நிமிடம் இளையோரை மையப்படுத்தி அமைகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.