டிச.28,2017. ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்தும், உலகின் ஏனைய கண்டங்களிலிருந்தும் சுவிட்சர்லாந்து நாட்டின் Basel நகரில் கூடியிருக்கும் இளையோரை தான் வாழ்த்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
டேஜே (Taizé) என்றழைக்கப்படும் குழுமத்தினரால், டிசம்பர் 28 முதல், சனவரி முதல் தேதி முடிய, Basel நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளையோர் மாநாட்டிற்கு, திருத்தந்தையின் சார்பில் இச்செய்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.
"பூமிக்கோளத்தின் மீது நம்பிக்கை கொண்ட திருப்பயணம்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான இளையோர், நற்செய்தியின் மகிழ்வைக் கொண்டிருக்கவேண்டும் என்று, திருத்தந்தையின் செய்தி அழைப்பு விடுக்கிறது.
கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், மற்றும் கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த இளையோர் தூய ஆவியாரின் வழிநடத்துதலால் இணைந்து வந்திருப்பது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இந்த ஒற்றுமையிலும், கூட்டுறவிலும் இளையோர் தொடர்ந்து நடைபயில தன் ஆசீரை வழங்கியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |