2017-12-28 15:06:00

குழந்தைகள் தஞ்சம் பெற பாதுகாப்பான இடங்கள் இல்லை


டிச.28,2017. குழந்தைகள் வாழும் இல்லங்கள், பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள் அனைத்தும், வன்முறைகளின் இலக்குகளாக மாறி வருவதால், குழந்தைகள் தஞ்சம் பெறுவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடங்கள் எதுவும் இல்லை என்று, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் இவ்வியாழனன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குழந்தைகளை இலக்காக்கி மேற்கொள்ளப்படும் வன்முறைகள், ஒவ்வோர் ஆண்டும் வளர்ந்து வருவதால், இது இயற்கைதான் என்று எண்ணக்கூடிய ஆபத்து அதிகரித்து வருகிறது என்று யுனிசெப் உயர் அதிகாரி, மானுவெல் பொன்டெயின் (Manuel Fontaine) அவர்கள் கூறினார்.

பல்வேறு நாடுகளில் குழந்தைகள் வன்முறைகளுக்கு உள்ளாகும் விவரங்களைப் பட்டியலிட்டுள்ள இவ்வறிக்கை, 2017ம் ஆண்டில், வன்முறைகளின் காரணமாக, 8,50,000 குழந்தைகள் காங்கோ குடியரசின் Kasai பகுதியிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர்; நைஜீரியாவில் 135 குழந்தைகள், தற்கொலைப் படையினராக குண்டுகளைச் சுமந்து சென்றுள்ளனர் என்று கூறியுள்ளது.

இதேபோல், சிரியா, தென் சூடான், ஆப்கானிஸ்தான், மியான்மார், ஏமன், உக்ரைன் ஆகிய நாடுகளில் குழந்தைகள் அனுபவித்துவரும் வன்முறைகளும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகின் அரசுகள், வருங்காலத்தைக் காக்கும் கடமையை உணர்ந்தவர்களாக, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று யுனிசெப் அறிக்கை வலியுறுத்துகிறது.

ஆதாரம் : UNICEF / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.