2017-12-25 11:18:00

டிசம்பர் 24, ஞாயிறு, திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை


டிச.25,2017. இயேசு கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவை சிறப்பிக்க இவ்வுலகம் தயாரித்துவரும் வேளையில், இஞ்ஞாயிறன்று, நண்பகல் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 17,000க்கும் மேற்பட்ட திருப்பயணிகளுக்கு தன் மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறின் நற்செய்தி வாசகமான, 'கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு' பகுதியை மையமாக வைத்து, வானதூதரின் வாக்குறுதிகளுக்கும், அன்னைமரியாவின் பதிலுரைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை படம்பிடித்துக் காட்டுவதாக, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வானதூதரின் மிகப் பெரிய வெளிப்பாடு, அன்னை மரியில் ஒரு சிறு பதிலுரையையே வழங்க வைக்கிறது. அன்னை மரியாவில் எளிமை வெளிப்படுகிறது, அவ்வாறு, எளிமையாய் இருப்பதையே அவரும் விரும்புகிறார். கடவுளின் முன்னால், தான் மிகச் சிறியவர் என்பதை அன்னை மரியா உணர்ந்தவராக உள்ளார். அன்னை மரியாவின் பதிலுரையை சார்ந்திருக்கும், இந்த முன்னறிவுப்புக்கு, ஆம் என்ற பதில்மொழி வழியாக, இறைத் திட்டம் நிறைவேற உதவுகிறார். அதாவது, மனித குலத்தின் பணிக்கு தன்னை ஒப்படைக்கிறார்.

இறைவனின் திட்டத்திற்கு, 'இதோ உமது அடிமை' என பதில்மொழி வழங்கிய அன்னை மரியா, நம் வாழ்வில் கடவுளின் திட்டத்தை வரவேற்க நமக்கு உதவ வேண்டும் என கேட்போம்.

இவ்வாறு, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில் மோதல்களால் துன்புறும் மக்களுக்காக செபிக்குமாறு அழைப்பு விடுத்தார். கடத்தி வைக்கப்பட்டு துன்பங்களை அனுபவிக்கும் அனைவரும் விடுவிக்கப்பட்டு, தங்கள் இல்லங்களுக்கு செல்ல வழி பிறக்குமாறு, மீண்டுமொருமுறை அழைப்பை முன் வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், பிலிப்பீன்ஸ் நாட்டின் மிந்தனாவோ தீவில், புயலாலும், பெருமழையாலும் பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற மக்களுக்கு, தன் செப உறுதியை வழங்குவதாகவும், இதில் உயிரிழந்தவர்களை கருணை நிறை இறைவனிடம் ஒப்படைக்கும் அதேவேளை, துன்புறுவோருக்கு இறை இரக்கத்தை வேண்டுவதாகவும் கூறினார், திருத்தந்தை.

மேலும், இத்திங்கள், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவையொட்டி, டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கிறிஸ்து பிறப்பு குடில் காட்சியை நின்று உற்று நோக்குங்கள். இடையர்களைப்போல், உண்மையான கிறிஸ்மஸ் உணர்வுடன், நாம் எப்படியிருக்கிறோமோ, அப்படியே, நம்மை, இயேசு பாலனிடம் கொணர்வோம்' என எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.