2017-12-19 16:33:00

திருத்தந்தைக்கு குழந்தைகள் அளித்த ஓவியங்களின் கண்காட்சி


டிச.19,2017. உலகில் உள்ள குழந்தைகள் மீது அக்கறையை வளர்க்கும் நோக்கத்தில், குழந்தைகள் உருவாக்கி, திருத்தந்தைக்குப் பரிசளித்த ஓவியங்கள் அடங்கிய ஒரு கண்காட்சி, இச்செவ்வாயன்று உரோம் நகரில் துவங்கியுள்ளது.

உரோம் நகரின் குழந்தை இயேசு மருத்துவமனையும், இயேசு சபையினர் நடத்தும் La Civilta Cattolica இதழும் இணைந்து நடத்தும் இக்கண்காட்சியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் திறந்து வைக்கிறார்.

"அன்பு திருத்தந்தையே, நான் உமக்கு ஓர் ஓவியத்தை அளிக்கிறேன்" என்ற தலைப்பில், குழந்தைகளால் வரையப்பட்டு, பல்வேறு தருணங்களில் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஓவியங்கள், இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

நோயுற்ற குழந்தைகள், மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சிகிச்சைக்கால செலவை ஏற்று உதவும் திருப்பீடத்தின் குழந்தைகள் நல மருத்துவமனையான குழந்தை இயேசு மருத்துவமனை, இப்பணியில் அனைத்து மக்களின் ஒத்துழைப்பையும், தாராள மனதையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இந்த ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.