2017-12-11 15:45:00

எருசலேமை, திருப்பீடம், ஆழ்ந்த கவலையோடு கவனித்து வருகிறது


டிச.11,2017. கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும், இஸ்லாமியருக்கும் பொதுவான புனித நகரான எருசலேமைக் குறித்து அண்மையில் எழுந்துள்ள பதட்ட நிலைகளை, திருப்பீடம் ஆழ்ந்த கவலையோடு கவனித்து வருவதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

எருசலேம் நகரைச் சுற்றி எழுந்துள்ள அண்மைக்கால மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேலும் வன்முறைகளைத் தவிர்க்கும் நோக்கத்தில், நீதி, மற்றும் பாதுகாப்பை மனதில் கொண்டு, அனைத்து உலகத் தலைவர்களும் உழைக்கவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரபு நாடுகள் அமைப்பும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அவையும், அண்மைக்காலங்களில் எடுத்துவரும் அமைதி முயற்சிகள் குறித்து மகிழும் அதே வேளை, அண்மையில் எழுந்துள்ள பதட்ட நிலைகளால், இந்த அமைதி முயற்சிகள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தையும் திருப்பீடம் இவ்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

மூன்று மதங்களுக்குப் பொதுவான தனித்துவமிக்க எருசலேம் நகர் குறித்த பிரச்சனைகளுக்கு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு இடையே நிகழும் கலந்துரையாடல்கள் மட்டுமே தீர்வைக் கொணரும் என்பது, திருப்பீடத்தின் உறுதியான நம்பிக்கை என்று இவ்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.