2017-12-05 14:25:00

சண்டைகளை நிறுத்தி, குழந்தைகளை வாழ விடுங்கள்


டிச.05,2017. ஏமன் நாட்டில் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் சிக்கியிருக்கும் குழந்தைகள், போதிய உணவு உதவிகளை பெறமுடியாத நிலையில், காயமடையவும், மரணமடையவும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்ற கவலையை வெளியிட்டுள்ளது, Save the Children என்ற பிறரன்பு அமைப்பு.

மக்களின் உயிர்களை, குறிப்பாக, குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற உதவும் நோக்கில், உடனடியாக மோதல்கள் ஏமன் நாட்டில் நிறுத்தப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ள இந்த பிறரன்பு அமைப்பு, தலைநகர் Sanaவிலும் ஏனைய பல மாவட்டங்களிலும், வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்று வருவதால், உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது எனவும் தெரிவிக்கிறது.

தொடர்ந்த தாக்குதலின் காரணமாக, குழந்தைகளும், கர்ப்பினிப் பெண்களும், உதவிப் பணியாளர்களும் தங்கள் இடங்களை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவி வருவதால், கையிருப்பு உணவுப் பொருட்களைக்கூட விநியோக்கிக்க முடியாத நிலை இருப்பதாக, ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறது, இந்த அமைப்பு.

ஆயுத தாக்குதல்களுக்கு இடையே சிக்கியுள்ள குழந்தைகள், இத்தாக்குதல்களின் மூர்க்கத்தனத்தால் மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உயிர்காக்கும் மருந்துகளைக்கூட தேவைப்படுவோருக்குக் கொண்டு செல்ல முடியாத அவலநிலை உள்ளதாகவும், மேலும் தெரிவிக்கிறது, Save the Children அமைப்பு.

போதிய சத்துணவின்றி குழந்தைகள் வாடும் நிலையும், பஞ்சச் சாவுகள் நிகழும் ஆபத்தும், நோய்களுக்கு குழந்தைகள் உள்ளாகும் நிலையும் அதிகரித்து வருவதாகக் கூறும் இந்த அமைப்பு, குடிநீரின் விலை தற்போது 6 மடங்கு அதிகரித்து, ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

அனைத்து அவல நிலைகளுக்கும் தீர்வு காண்பதற்கு, சண்டைகள் நிறுத்தப்படுவதே ஒரே வழி எனவும் விண்ணப்பித்துள்ளது Save the Children அமைப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.