2017-12-05 15:00:00

இறையன்புக்கு முன்னால் நாம் எல்லாரும் பிச்சைக்காரர்கள்


டிச.05,2017. “நம் இருப்புக்கு அர்த்தம் கொடுத்து, முடிவில்லாத வாழ்வை நமக்கு வழங்கும், இறைவனின் அன்புக்கு முன்னால் நாம் எல்லாரும் பிச்சைக்காரர்கள்” என்று, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், டிசம்பர் 05, இச்செவ்வாய் காலையில், உரோம் இயேசு சபை தலைமையகத்திற்குச் சென்று, இயேசு சபை அருள்சகோதரர் Salvador Angel Mura அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டினாவில், இயேசு சபை அருள்பணியாளர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ, அதாவது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு சபை மாநில அதிபராகப் பணியாற்றியவேளையில், அருள்சகோதரர் Mura அவர்கள், செயலராகவும், வாகன ஓட்டுனராகவும் பணியாற்றியவர்.

அருள்சகோதரர் Mura அவர்கள், உரோம் இயேசு சபை புனித கனிசியுஸ் இல்லத்தில் டிசம்பர் 02, கடந்த சனிக்கிழமை இரவு காலமானார். இச்செவ்வாய் காலை 10.30 மணிக்கு, உரோம் இயேசு சபை தலைமையகத்திற்குச் சென்று, பத்து நிமிடங்கள் அமைதியாகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், அமெரிக்க ஐக்கிய நாட்டின், அமல அன்னை தேசிய திருத்தலத்தின் மேல்மாடத்தை தூய ஆவியாருக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, தனது சிறப்பு பிரதிநிதியாக, கர்தினால் Kevin Joseph Farrell அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 08, வருகிற வெள்ளியன்று, வாஷிங்டன் அமல அன்னை தேசிய திருத்தலத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வில், திருப்பீடத்தின், பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு அவையின் தலைவர் கர்தினால் Farrell அவர்கள், திருத்தந்தையின் பிரதிநிதியாக கலந்துகொள்வார் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பசிலிக்காவை, 2015ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி பார்வையிட்டுள்ளார். 1920ம் ஆண்டில், இந்த பசிலிக்காவிற்கு அடித்தளம் நாட்டப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.