2017-12-04 16:44:00

2018ல் இந்தியாவில் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை ஆவல்


டிச.,04,2017. சீனாவுடன் ஆன உறவிலும், அந்நாட்டிற்கான திருத்தூதுப்பயண வாய்ப்பிலும், படிப்படியாக, மெதுவாக, பொறுமையுடன் செயல்பட வேண்டியத் தேவையுள்ளது, இதயத்தினுடைய கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, பங்களாதேஷிலிருந்து உரோம் நோக்கி திரும்பும் வழியில், தன்னுடன் பயணம் செய்த பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீன நாட்டிற்கான திருத்தூதுப் பயணம் குறித்து எந்த தயாரிப்புகளும் இடம்பெறவில்லை எனவும், படிப்படியாக, பொறுமையுடன் இடம்பெறும் முயற்சிகள் வெற்றி பெற்றால், அது அனைவருக்கும் நன்மை பயப்பதாக இருக்கும் எனவும் கூறினார்.

சீன திருஅவை குறித்த அரசியல் பேச்சு வார்த்தைகள் இடம்பெறுவதையும், வத்திக்கான் அருங்காட்சியகம், சீனாவில், கண்காட்சி ஒன்றை திறந்துள்ளதையும், தன் பதிலுரையில் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை.

ரொஹிங்கியா இன மக்கள் பிரச்னை குறித்தும், பத்திரிகையளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திருத்தந்தை, இந்த மக்களுக்கு பங்களாதேஷ் நாடு ஆற்றும் பணிகளை சிறப்பாகப் பாராட்டி, இது ஏனைய நாடுகளுக்கு இந்நாடு சிறந்ததோர் எடுத்துக்காட்டு என குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கான திருத்தூதுப் பயண வாய்ப்புகள் பற்றியும் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேறு நாடுகளுடன் இணைக்கப்படாமல், இந்தியாவிற்கென்று மட்டும் ஒரு திருப்பயணத்தை திட்டமிட விரும்புவதாகவும், தான் உயிருடன் இருந்தால், 2018ம் ஆண்டில் அது இடம்பெறவேண்டும் என்று தான் நம்பிக்கை கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.